பழங்குடியினரின் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் காகிதங்களில் ஓவியங்களை வரைந்து இளைஞர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருளர் மற்றும் குரும்பர் இன பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள கரிக்கையூர் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளம் 8 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்ட பாறையில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை வர்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன.
அதில் பண்டைக் காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், கலாச்சாரம், உணவு முறை, வேட்டைக்குச் செல்லுதல், கால்நடை வளர்ப்பு, இசைக்கருவிகள் வாசிப்பு, ஆயுதங்கள் மற்றும் தொழில்கள் குறித்து இயற்கையான தாவரங்கள், பூச்சிகளிலிருந்து கிடைக்கும் சாயங்கள் போன்றவை தத்துரூபமாக வரையப்பட்டிருக்கின்றன.
இவை பல ஆண்டுகள் கடந்தும் அழிந்து போகவில்லை. இப்பகுதியை தடயவியல்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
இந்தப் பாரம்பரிய பாறை ஓவியங்களை வெளியுலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் பழங்குடியின இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதாவது அந்த ஓவியங்களைப் போலவே காகிதங்களில் வரைந்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர்.
இது தவிர காகிதத்தில் ஓவியங்களை வரைந்தாலும் இயற்கையில் கிடைக்கும் வேங்கை மரத்தின் பால், தாவரங்கள் மற்றும் பூக்களின் சாயங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திய வருகின்றனர்.
இந்த இயற்கை ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பழங்குடியின இளைஞர்கள் கூறியதாவது ஓவியங்களின் சிறப்பு குறித்து பலருக்கு தெரிவதில்லை எனவும், அதில் பழங்குடியினரின் வாழ்க்கை முறையும் அடங்கியுள்ளது.
ஆகையால் அனைவரும் இதனை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஓவியங்களை காகிதங்களில் வரைந்து விற்பனை செய்கின்றோம். அதற்கு கூட ரசாயன பூச்சுகளை பயன்படுத்தாமல் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே ஓவியங்களை வருகின்றோம்.
இதனை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் பழங்குடியினரின் வாழ்க்கை முறை அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஓவியங்களை ஆதிவாசிகள் நல சங்கத்தினர் பழங்குடியின தயாரிப்புகள் விற்பனை மையத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஓவியங்களை விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் தொகையை இளைஞர்களுக்கு வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.