திருநெல்வேலி மாவட்டம் விகே புரம் பகுதியில் நேற்று (02/12/2022) மாலை முருகன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 4 மணி அளவில் மரம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
சாலை வேலை நடைபெறுவதற்காக அந்த சாலையில் இருந்த மண்ணை அகற்றியதால் (சாலையின் இருபுறமும்) அந்த மரம் சாய்ந்து அவர் மீது விழுந்துள்ளது.
இதில் அவர் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவாறு பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு MRI ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.
அதன் பின்னர் தான் அதற்கான சிகிச்சை கொடுக்க முடியும் என்று சூழ்நிலை இருக்கும் போதும் வரும் செவ்வாய்க்கிழமை தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே அரசிடம் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரின் கவனக்குறைவினாலே இந்த விபத்து நடந்துள்ள சூழ்நிலையில் மேலும் மருத்துவ நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இப்போது சிகிச்சையிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நிவாரணம் வழங்குவதை விட, உயிருடன் இருக்கும் போது தேவைப்படும் குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் ஓர் உயிர் காப்பாற்றப்படும். தமிழக முதல்வரும், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணயம் அவர்களும் கவனத்தில் கொண்டு ஆவன செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு கேட்டுக்கொள்கிறேன்.
- வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணியின் மாநிலத் துணை தலைவர்)