தீபாவளிக்கு வெளியானது, நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் படத்துக்குத்தான் பிரச்னைகள் பல! அது வழக்கம் போல் விஜய் படத்துக்கு ஏற்படுத்தப் படும் பிரச்னைகள்தான் என்று சமாதானம் கூறினாலும், தொடர்ச்சியாக ஒரு நடிகள் இவ்வாறு சர்ச்சைக்குரிய விதத்தில் படத்தில் நடிப்பதும், அதற்கு எதிர்ப்புகள் எழுவதும் வழக்கமான ஒரு சாதாரண செயல்களாகப் பார்க்க முடியவில்லை!
இந்த முறை, கதைத் திருட்டு என்பதில் தொடங்கி, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது விஜய்யின் சர்கார். கடந்த முறை மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விமர்சித்து சினிமாவில் மெசேஜ் சொன்ன விஜய், இந்த முறை மாநில அரசின் மீது கைவைத்துள்ளார்.
மாநில அரசு இலவசங்களை வழங்கி மக்களைக் கவர்கிறது என்ற கருத்தை முன்வைத்துள்ள விஜய், இந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் சார்ந்த திமுக., மற்றும் அதன் தலைவராக இருந்த கருணாநிதியையும் மறைமுகமாகத் தாக்கி மெசேஜ் கொடுத்துள்ளார். காரணம், கருணாநிதிதான் இலவசப் பொருள்களை குறிப்பாக கலைஞர் டிவி.,யை மக்களுக்கு இலவசமாக வழங்கி, சன் டிவி மற்றும் அது சார்ந்த கேபிள் தொழிலை ஏகபோக உரிமையாக்கி, தொழில் பரவ வழிசெய்து கொடுத்தார்.
எனவே, இலவச பொருளை எரிப்பதாக காட்சியில் காட்ட வேண்டுமானால், கலைஞர் டிவி.,யை காயலான் கடையில் போடுவதற்கு பதிலாக, அதை எரிக்கும் வகையில் காட்சியை அமைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள்.