சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பாக, ஆளுநர் சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்புத் துண்டு ஆகியவை வழங்கப் படுகின்றன.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அனைத்து கார்டுகளுக்கும் ரூ.1000 கொடுக்கக் கூடாது என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும் என்றும் கூறியது.
எந்தப் புள்ளி விவரங்களும் இல்லாமல் எப்படி ரூ. 1000 அரசு வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பச்சை நிற குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் கட்சிப் பணத்தை எடுத்து செலவிட்டால் நாங்கள் கேட்க மாட்டோம். அரசு பணத்தை செலவிடுகிறீர்கள்… எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், ரூ. 1000 வழங்க மட்டுமே தடை விதிக்கப் பட்டதாகவும், அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கத் தடையில்லை.
என்றும் உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியது.
முன்னுரிமை பெறாத (NPHH), சர்க்கரை மட்டுமே பெறும் (NPHHS) ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது.
இதை அடுத்து, குழப்பத்தில் தவித்த அதிகாரிகள், சிறிது நேரம் கழித்து, ரூ.1000 வழங்காமல் தவிர்த்தனர். ஆனால், பொதுமக்கள் அது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்..
ஏற்கெனவே கடந்த 3 நாட்களாக பலரும் ரூ.ஆயிரத்தை வாங்கிவிட்டதால், அதுபோல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.