மதுரை மண்டேலா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவுக்காக வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர்.
அப்போது, பிரதமர் மோடிக்கு மீனாட்சி அம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மதுரை நகருக்கு வந்ததன் அடையாளமாக, மதுரை மீனாட்சி அம்மன் விக்ரகத்தைப் பரிசளித்தார். இதனை தனது பேச்சில் நினைவு கூர்ந்தார் மோடி. தாம் மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு வந்தது பெருமை என்றார்.
முன்னதாக, மோடியை வரவேற்ற குழுவில், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையும் இருந்தார். அவர் பூங்கொத்து கொடுக்கும் புகைப்படத்தைக் கண்ட சமூக வலைத்தள வாசிகள், தங்களது விமர்சனத்தைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். மோடியைக் குறித்து வசைபாடும் அதிமுக.,வின் தம்பிதுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.