அதிமுக., பாஜக., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்திருந்தார் பியூஷ் கோயல். பாஜக., அதிமுக., கூட்டணி இறுதி செய்யப் பட்டுவிட்ட நிலையில், தொடர்ந்து தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்திப்பதற்காக அவரது விருகம்பாக்கம் வீட்டுக்குச் சென்றார்.
விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்.
ஆயினும், பாமக.,வுக்கு 7 தொகுதிகள் கொடுக்கப் பட்டதால், தேமுதிக., அதை விட அதிக தொகுதிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவடையவில்லை என்று கூறப் படுகிறது. இருப்பினும், தேமுதிக.,வின் சுதிஷுடன் பியூஷ் கோயல் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் அதிமுக., தலைமையில் மெகா கூட்டணி அமைவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஏற்ப, முதலில் பாஜக., மேலிடத்துடன் அதிமுக., பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பின்னர் பாமக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக., பாமக., கூட்டாக கூட்டணி குறித்து அறிவித்து, உறுதி செய்தன. அப்போது பாஜக.,வினர் யாரும் இல்லை.
இந்நிலையில் தேமுதிக.,வுடன் கூட்டணிப் பேச்சைத் தொடர பாஜக.,வின் பியூஷ் கோயல்தான் சென்றிருந்தார். அதிமுக., ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாகக் கூறப்படுகிறது.