சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
15. உயர்ந்த இலக்கு தேவை!
ஸ்லோகம்:
ஆயுர் வர்ஷ சதம் ந்ருணாம் பரிமிதம் ராத்ரௌ ததர்தம் கதம்
தஸ்யார்தஸ்ய பரஸ்ய சார்தமபரம் பாலத்வ்ருத்தத்வயோ: |
சேஷம் வ்யாதிவியோகது:கசஹிதம் சேவாதிபிர்னீயதே
ஜீவே வாரிதரங்கசஞ்சலதரே சௌக்யம் குத: ப்ராணினாம் ||
– பர்த்ருஹரி
பொருள்:
மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள். அதில் பாதி நேரம் இரவாக உறக்கத்தில் கழிகிறது. மீதி உள்ள ஐம்பது ஆண்டுகளில் இளமை, முதுமை இவற்றின் கீழ் 25 ஆண்டுகளும் மற்றும் உள்ள 25 ஆண்டுகள் வயிற்றுப்பாட்டுக்கும், பிறருக்கு சேவை செய்து பணியாற்றுவதிலும், நோய், துன்பம், துயரத்திலும் கடந்து போகிறது. நீரலை போல் கண நேரத்தில் கடந்துவிடும் மனித வாழ்வில் சுகம் ஏது?
விளக்கம்:
பிறத்தல், வளர்தல் கல்வி, திருமணம், வேலை, குழந்தைகள், அவர்களை வளர்த்தல், முதுமை, நோய், மரணம்… இவ்வளவு தான்! சாதாரணமாக வாழ்க்கை பலருக்கும் இப்படித்தான் கழிகிறது. இதில் சுகம் இல்லை என்கிறார் பர்த்ருஹரி. தேசத்திற்காக, சமுதாயத்திற்காக, மனித இனத்திற்காக வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.
நூறாண்டு வாழ்க்கை எவ்வாறு கடக்கிறது? வாழ்க்கையின் இலக்கை அடைந்தோம் என்று திருப்தியைப் பெறுவதற்காக வாழ்க்கைப் பாதையை மாற்ற இயலுமா என்று யோசிக்க வைக்கும் சுபாஷிதம் இது. லட்சியத்தோடு கூடிய வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை என்பது தாத்பர்யம்.
நூறாண்டு வாழ்வில் நமக்கு மீதியிருக்கும் நாட்கள் எத்தனை? கடலில் அலைகள் குறைந்த பின் குளிக்கலாம் என்ற எண்ணம் நிறைவேற கூடியதா? தர்மச் செயல் செய்வதை ஒத்திப் போடுபவர்களுக்கு உண்மையான நலன் கிடைக்காது. நேரத்தை வீணடிக்காமல் நல்லவிதமாக செலவழிக்காவிட்டால் வாழ்க்கையை வீணாக்கியதற்காக பச்சாதாபம் அடைய வேண்டியிருக்கும்.
நன்மை அனைவருக்கும் வேண்டும். ஆனால் நாம் வாழும் விதம் அதற்கு மாறுபாடாக இருந்தால்? வாழ்க்கை வாழ்வதன் பயன் கிட்ட வேண்டும் என்றால் லட்சியத்தோடு கூடிய வாழ்க்கை வாழ வேண்டும்.