சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்:
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
29. கோபத்தின் வகைகள்!
செய்யுள்:
உத்தமே து க்ஷணம் கோபோ மத்யமே கடிகாத்வயம் |
அதமே ஸ்யாதஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தகம் ||
– போஜ சரித்திரம்
பொருள்:
உத்தமமான முதல்நிலை மனிதர்களுக்கு கோபம் வந்தால் கணநேரம் மட்டுமே இருந்து மறைந்துவிடும். இடைநிலை மனிதர்களுக்கு கோபம் இரண்டு கடிகைகள் (ஒரு கடிகை என்பது 24 நிமிடங்கள்), கடைநிலை மனிர்களுக்கு கோபம் ஒரு இரவும் ஒரு பகலும் இருக்கும். இனி வாழ்நாள் முழுவதும் மனதில் கோபத்தை நிறைத்து வைத்திருப்பவர்கள் பாவிகள்!
விளக்கம்:
கோபம் யாருக்கு வேண்டுமானாலும் அவ்வப்போது வரும். ஆனால் அந்த கோத்தை அடக்கி ஆளவேண்டும் என்பது பெரியவர்களின் அறிவுரை. மனிதர்களிடம் கோபம் எத்தனை நேரம் இருக்கும் என்பதைப் பொறுத்து அவர்களின் ஆளுமையை வரிசைப்படுத்துகிறார் கவி இந்த சுலோகத்தில்.
கோபம் வந்தது போல் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள் பெரியவர்கள். உண்மையிலேயே கோபம் வந்தால் நிலைதடுமாறி சொல்லக்கூடாத சொற்கள் வாயில் வரும். ஆத்திரத்தில் செய்யக்கூடாத கோரங்கள் நடந்து விடும். அதனால்தான் சினம் கொண்டது போல் நடித்தால் போதும் என்று கூறுவார்கள்.
சினம் எப்போது வரும்? எதனால் வரும்? யாராவது நாம் நினைத்தது போல் நடக்காவிட்டாலோ திட்டமிட்ட செயலுக்கு நஷ்டம் ஏற்படுத்தினாலோ நமக்கு எதிராக நடந்து கொண்டாலோ அவர்கள் மேல் கோபம் வரும்.
தவறு செய்தவர்களை சரியான வழியில் நடக்க வைப்பதற்காகவே உத்தம மனிதர்கள் கோபம் வந்தது போல் காட்டிக் கொள்வார்கள். அதுவும் ஒரு கண நேரம் மட்டுமே இருக்கும். உடனே மனதில் இருந்து மறைந்து விடும். இடைநிலை மனிதர்கள் சற்று நேரம் கோபத்தால் அவதிப்பட்டாலும் பின்னர் கோபத்தை குறைத்துக் கொள்வார்கள். நடந்து முடிந்த நஷ்டத்தை எவ்வாறு சரிசெய்வது என்பது புரியும் வரை மட்டுமே அந்தக் கோபம் இருக்கும்.
அதமர்களான கடைநிலை மனிதர்களுக்குத் தம் வேலையைக் கெடுத்தவர்கள் மேல் ஒரு நாள் முழுவதும் கோபம் இருக்கும். வாழ்நாள் முழுவதும் கோபம் கொண்டிருப்பவர்கள் பாவிகள்! அரக்க குணம் உடையவர்கள்! அதனால் கோபத்தை அடக்கி உத்தம மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்.