சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
48. அன்பை விரும்புபவரின் அடையாளம்.
செய்யுள்:
ததாதி ப்ரதி க்ருஹ்ணாதி குஹ்யாமாக்யாதி ப்ருச்சதி |
புங்க்தே போஜயதே சைவ ஷட்விதம் ப்ரீதிலக்ஷணம் ||
பொருள்:
கொடுப்பது, கொடுப்பதை வாங்கிக் கொள்வது, ரகசியங்களை பகிர்வது, கேட்டுத் தெரிந்து கொள்வது, உணவளிப்பது, அளிக்கும் உணவை ஏற்பது இந்த ஆறு குணங்கள் அன்பின் அடையாளங்கள்.
விளக்கம்:
பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்பார்கள். நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும் தொடர்பை அழகாக வர்ணிக்கிறது இந்த ஸ்லோகம்.
நண்பர்கள் இடையே நடக்கும் விவகாரங்களை மூன்று இரட்டைகளாக வர்ணிக்கிறார் கவி. இருவரிடையே ஒளிவு மறைவின்றி பரஸ்பர கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும் என்ற செய்தி இதில் உள்ளது. ஒருதலைப்பட்சமாக இல்லாத நட்பு மட்டுமே நீடிக்கும். நண்பனின் வீட்டுக்குச் சென்றோமா? அவனை அழைத்து உணவளித்தோமா? நண்பனின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தோமா? அவனுடைய பிரச்சினைகளைப் பற்றி தெரிந்து கொண்டோமா? என்று நம்மை நாம் வினா எழுப்பி கொள்ளத் தூண்டும் சுலோகம் இது.