விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -13
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
13. Planning & Strategy
தொலை நோக்குப் பார்வை
கட்டாயம் தேவை!
தர்மத்தை ஆதாரமாகக் கொண்டு அரசாட்சி நடந்தகாலத்தில் நடந்த கதை இது. தர்மப்ரஸ்தம் என்ற பெயர் கொண்ட தேசம் ஒன்று இருந்தது. பெயருக்குத் தகுந்தாற்போல் அரசனும் மக்களும் தர்மத்தோடு நடந்து கொண்டனர்.
ஐந்தாண்டுகளுக்கொரு முறை அரசனைத் தேர்ந்தெடுப்பதும் அவருடைய பதவிக்காலம் முழுமையடைந்தவுடனே அந்த அரசனை பூர்ணா நதியின் அக்கரையில் இருக்கும் கொடிய விலங்குகளோடு கூடிய ஒரு காட்டிற்கு சகல அரச மரியாதையோடும் அனுப்பி வைப்பதும் அந்த தேசத்தின் வழக்கம்.
அதன் பின் அந்த அரசன் என்ன ஆனான் என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. நதியைத் தாண்டும் போது பதவிக் காலம் முடிந்த அந்த அரசர்கள் மிகவும் வருந்துவர். அவர்களுடைய துயரத்தைப் பார்த்து படகில் கொண்டு விடும் படகோட்டி மிகவும் இரக்கப்படுவான். அந்த படகோட்டி இதுவரை எட்டு அரசர்களைப் பார்த்துள்ளான்.
ஆனால் இந்த ஒன்பதாவது அரசர் சிரித்தபடி உற்சாகமாக காணப்பட்டார் காட்டிற்குச் செல்வதில் ஆர்வத்தோடு இருந்தார். அதைப் பார்த்து படகோட்டிக்கு வியப்பாக இருந்தது.
ஒன்பதாவது அரசரிடம் அது பற்றி கேட்ட போது, “எனக்கு பதவிப் பிரமாணத்தின் போதே இது ‘ஐந்து வருட வைபவம்’ என்று தெரியும். அதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகான வாழ்க்கை குறித்து என் திட்டத்தைத் தொடங்கி விட்டேன். நதியின் அக்கரையில் ஒரு சிறு கிராமத்தை நிர்மாணித்தேன். அங்கிருக்கும் மக்கள் என் வருகைக்காக எதிர்பார்த்திருப்பர்” என்றான்.
அரசன் கூறியது போலவே நூற்றுக்கணக்கான மக்கள் நதிக் கரையில் புது அரசனுக்கு வரவேற்பு அளிப்பதற்கு வந்திருப்பதை படகோட்டி கவனித்தான்.
உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. அதானை சரியான சமயத்தில் வடிவமைத்துக் கொள்ளும் புத்திகூர்மை பெற்றிருக்க வேண்டும். முன்னோக்குப் பார்வை முக்கியம் என்பதை இந்த கதை போதிக்கிறது.
தலைவன் நிகழ்காலத்தில் இருந்து கொண்டே எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். வரப் போகும் நாட்களில் தன் அரசாட்சி நன்கு நடக்க வேண்டுமென்றால் இந்த பார்வை தேவை. குறைந்த பட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்காவது நம் திட்டம் என்ன என்பது குறித்து தலைவன் சிந்திக்க வேண்டும். நாட்டை ஆள்பவராகட்டும். நிறுவனங்களின் உரிமையாளராகட்டும் எதிர்காலத்தில் வெற்றிகளை சாதிப்பதற்குத் தகுந்த திட்டங்களை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.
மகாபாரதத்தில் விதுரன் தர்ம ராஜனிடம் கூறுகையில் நாளைய வேலையை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்யவேண்டிய வேலையை காலையே செய்யவேண்டும் என்று போதிக்கிறார். நல்ல எதிர்காலத்திற்காக இவ்விதமான சிந்தனை அவசியம்.
திவசேனைவ தத்குர்யாத் யேன ராத்ரௌ சுகம் வசேத் !
அஷ்டமாசேன தத்குர்யாத் யேன வர்ஷா: சுகம் வசேத் !!
(மகாபாரதம் உத்தியோக பர்வம் 36-37)
பொருள்:- எந்த வேலை செய்தால் இரவு நிம்மதியாக உறங்க முடியுமோ அந்த வேலையை பகலிலேயே செய்து முடிக்க வேண்டும். நான்கு மாத மழை காலத்தில் நிம்மதியாக கழிப்பதற்கு ஏதுவாக மீதி உள்ள எட்டு மாதங்களில் வேலை நடை பெற வேண்டும்.
முதிய வயதில் சுகமாக வாழ இளம் வயதில் உழைக்க வேண்டும். அடுத்த பிறவிக்கான சுகத்திற்காக இப்பிறவியிலேயே பாடுபட வேண்டும். இதுவே பாரதிய கர்ம சித்தாந்தம்.
சுபம்!