விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -20.
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
20. Communication &
Interpersonal Relationship skills
இப்படி இருக்க வேண்டும்… அப்படி அல்ல!
வால்மீகி முனிவர் நாரதரிடம் ஒரு வினா எழுப்பினார். தற்போது பூலோகத்தில் இந்த பதினாறு குணங்களுள்ளவ்ர் யாராவது உள்ளாரா என்று கேட்டார். பல யுகங்களுக்கு முன்னால் கேட்கப்பட்ட கேள்வியே ஆனாலும் நிகழ்கால அரசாளுபவர்களுள் நாம் விரும்பக் கூடிய குணங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கு பயன்படும் கேள்வி இது.
கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கஸ்ச வீர்யவான் ! தர்மஞ்ஜஸ்ச க்ருதஞ்ஜஸ்ச சத்யவாக்யோ த்ருடவ்ரத: !!
சாரித்ரேண ச கோ யுகத: சர்வபூதேஷு கோ ஹித: !
வித்வான் க: க: சமர்தஸ்ச கஸ்சைக ப்ரியதர்சன: !!
ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ த்யுதிமான் கோ ந சூயக: !
கஸ்ய பிப்யதி தேவாஸ்ச ஜாதரோஷஸ்ய சம்யுகே !!
(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம்- 2- 3 – 4)
என்ன அந்த பதினாறு குணங்கள்?
நற்குணம் நிறைந்தவர்
பராக்கிரமம் உள்ளவர்
தர்மம் அறிந்தவர், தர்மத்தை கடைபிடிப்பவர்
நன்றியுள்ளவர்
உண்மையே பேசுபவர்
திட சங்கல்பம் கொண்டவர்
நன்னடத்தை உடையவர்
அனைத்துயிர்களின் நலம் கோருபவர்
அனைத்து விஷயங்களிலும் அறிவுக் கூர்மை மிகுந்தவர்
சாமர்த்தியத்தோடு பிறரால் செய்ய இயலாதவற்றையும் செய்பவர்
காண்போருக்கு ஆனந்தமளிப்பவர்
தைரியமானவர்
கோபத்தை வென்றவர்
பிரகாசமான ஒளி பொருந்தியவர்
பொறாமை அற்றவர்
கோபம் வந்தால் உலகமே அஞ்சும்படி செய்பவர்
இந்த நற்குணங்கள் அனைத்தும் உள்ள உத்தம மனிதன் வால்மீகி முனிவரின் சமகாலத்தில் வாழ்ந்த ரகுராமன் என்பது நாரத முனிவரின் பதில்.
தலைவர்கள் அனைவருக்கும் உதாரணம் ரகுராமன். ராம ராஜ்யத்தை நிலைநாட்டுவதே அரசாளுபவனின் ஆதரிச லட்சியம்.
எப்படிப்பட்ட தலைவன் வேண்டும்?
மகாபாரதம் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் தன் பேரனான தர்மபுத்திரனுக்கு நல்ல அரசளுபவனுக்கு இருக்க வேண்டிய முப்பத்தாறு குணங்களைக் குறிப்பிடுகிறார். குணவானான அரசாளுபவனுக்கு இருக்க வேண்டிய இந்த குணங்கள் வெறும் அந்நாளைய அரசகளுக்கு மட்டுமே அல்ல… இன்றைய அரசாளுபவருக்கும், தலைவன், அமைச்சர், நிறுவன மேலாளர், குடும்பத் தலைவர், நிறுவனத் தலைவர்… அனைவருக்கும் இருக்க வேண்டிய நற்குணங்கள் இவை/
சரேத்தர்மானகடுக: முஞ்சேத்ஸ்னேஹம் ந சாஸ்திக:
அன்ரு சம்ஸஸ்சரேதர்தம் சரேத்காமமனுத்தத: !!
(மகாபாரதம் சாந்திபர்வம் 70-3)
பொருள்:- விருப்பு வெறுப்பு இன்றி தர்மத்தோடு விளங்க வேண்டும் ஆஸ்திகனாக இருக்க வேண்டும். நட்பை விடக் கூடாது. குரூரமின்றி செல்வம் சேர்க்க வேண்டும். தர்மத்தோடு ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
ப்ரியம் ப்ரூயாத் அக்ருபண: சூர: ஸ்யாத விகத்தன: !
தாதா நாபாத்ரவர்ஷீ ஸ்யாத் ப்ரகல்ப: ஸ்யாத நிஷ்டுர: !!
(சாந்திபர்வம் -70-4)
பொருள்:- குறுகிய மனப்பான்மையின்றி அன்பாக பேசும் குணம், வீர சூரனாக இருந்த போதும் தற்பெருமையின்றி இருப்பது, பாத்திரமறிந்து தானமளிப்பது, மென்மையான உள்ளமும் திறமையும் கொண்டிருப்பது.
சந்ததீத ந சானார்த்யை: விக்ருஹ்ணீயான்ன பந்துபி: !
நா பக்தம் சாரயேச்சாரம் குரியாத்கார்யமபீடயா !!
(சாந்தி பர்வம் 70-5)
பொருள்:- துஷ்ட சகவாசம் செய்யாமலிருப்பது, உறவினர்களிடமிருந்து விலகாமலிருப்பது, ராஜ பக்தியில்லாதவனை ஒற்றனாக நியமிக்காமலிருப்பது, யாரையும் வருத்தாமல் காரியத்தை சாதிப்பது.
அர்தம் ப்ரூயான்ன சாஸத்சு குணாஸ்பூயான்ன சாத்மன: !
ஆதத்யான்ன சாதுப்ய: நாஸத்புருஷமாஸ்ரயேத் !!
(சாந்தி பர்வம் 70-6)
பொருள்:- தன் விருபங்களை தீயவர்களிடம் கூறாமல் இருப்பது, தன் குணங்களைத் தானே கூறிகொள்ளாமல் இருப்பது, நன்மக்களின் செல்வத்தை அபகரிக்காமல் இருப்பது, தீயவனின் உதவியைக் கோராமலிருப்பது.
நா பரீக்ஷ்ய ந யேத்தண்டம் ந ச மந்த்ரம் பிரகாசயேத் !
விஸ்ருஜேன்ன ச லூப்தேப்ய: விஸ்வசேநான்னாப காரிஷு !!
(சாந்திபர்வம் 70- 7)
பொருள்:- ஆராயாமல் தண்டிக்கக் கூடாது, ரகசியங்களை வெளியிடக் கூடாது, கருமிகளுக்கு தானம் அளிக்கக் கூடாது, கெடுதல் செய்பவர்களை நம்பக் கூடாது,
அனீர்ஷுர்குப்தார: ஸ்யாத் சோக்ஷ: ஸ்யாதம்ருணீ ஸ்ருப: !
ப்ரிய: ஸேவேத ஸாத்யர்தம் ம்ருஷ்டம் புஞ்ஜீத நாஹிதம் !!
(சாந்திபர்வம் 70-8)
பொருள்:- பொறாமையின்றி மனைவியைப் பாதுகாக்க வேண்டும், சுத்தமான மனமுடையவனாய் இருக்க வேண்டும், துஷ்டர்களை தண்டிக்கும் போது இரக்கம் காட்டக்கூடாது, பிற பெண்கள் மேல் மோகம் கூடாது, ருசியான உணவுகளையே உண்ண வேண்டும், உடலுக்குத் தீமையானவற்றை உண்ணக்கூடாது.
அஸ்தப்த: பூஜயேதன்யான் குரூன் சேவேதமாயயா !
அர்சேத்தேவானதம்பேன ஸ்ரியமிச்சேத குத்சிதாம் !!
(சாந்தி பர்வம் 70-9)
பொருள்;- தயக்கமின்றி பணிவோடு மதிப்புக்குரியவர்களை வணங்க வேண்டும், குருமார்களுக்கு கபடமின்றி சேவை புரியவேண்டும், ஆர்பாட்டமின்றி கடவுளை வழிபட வேண்டும், ஊழலற்ற செல்வத்தை விரும்ப வேண்டும்.
சேவேத ப்ரணயம் ஹித்வா தக்ஷ: ஸ்யான்ன த்வகாலவித் !
சாந்த்வயேன்ன ச மோக்ஷாய அநுக்ருஹ்ணன்ன சாக்ஷிபேத் !!
(சாந்திபர்வம் 70-10)
பொருள்:- அன்போடு சேவை புரிய வேண்டும், சரியான தருணத்தில் காரியத்தில் இறங்க வேண்டும், மென்மை குணம் இருக்க வேண்டுமே தவிர தப்பிக்கும் குணமிருக்கக் கூடாது, மெச்சிக் கொண்டே மறுக்கக் கூடாது.
ப்ரஹரேன்னத்வ விஞ்ஞாய ஹத்வா சத்ரூன்ன சோசயேத் !
க்ரோதம் கூர்யாத் ந ச அகஸ்மாத் ம்ருது: ஸ்யாத் ந அபகாரிஷு !!
(சாந்தி பர்வம் 70 -11)
பொருள்:- தெரிந்து கொள்ளாமல் தண்டிக்கக் கூடாது, பகைவனை தண்டித்தாலும் அவன் உறவினர்களை வருத்தக் கூடாது, திடீரென்று கோபம் வரக் கூடாது, தவறிழைப்பவரிடம் மிருதுவாக இருக்கக் கூடாது.
அரசாளுபவர் இப்படி இருக்கக் கூடாது:-
வால்மீகி முனிவர் ராமாயணத்தில் ராமன் மூலம் அரசாளுபவருக்கு இருக்கக் கூடாத குணங்களைக் குறிப்பிடுகிறார். இவற்றை ராஜ தோஷங்கள் என்று வர்ணிக்கிறார். இந்த பதினான்கு அரசப் பிழைகள் பற்றி ஸ்ரீராமன் தன் தம்பியான பரதனுக்கு போதிக்கிறான்.
நாஸ்திக்யமன்ருதம் க்ரோதம் பிரமாதம் தீர்க்க சூத்ரதாம் !
அதர்சனம் ஞானவதா மாலஸ்யம் பஞ்சவ்ருத்தி தாம் !!
ஏக சிந்தன மர்தானாமனர்தஞ்ஜைஸ்ச மஸ்த்ரணம் !!
நிஸ்சிதானாமனாரம்பம் மந்த்ரஸ்யா பரிரக்ஷணம் !!
மஞ்கலஸ்யாப்ரயோகம் ச ப்ரத்யுத்தானம் ச சர்வத: !
கச்சித்வம் வர்ஜயஸ்யேதான் ராஜதோஷாம்ஸ்ச துர்தச !!
(அயோத்யா காண்டம்-100-65,66,67)
பொருள்:-
கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் நல்ல அரசாளுபவராக இருக்க முடியாது.
பொய் கூறுபவன் அரசாள அருகதையற்றவன். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்.
அடக்க முடியாத கோபத்தை உடையவன நல்ல தலைவன் அல்ல.
அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. எப்போதும் கவனத்தோடும் விழிப்போடும் இருக்கவேண்டும்
முடிவெடுபப்தில் தாமதம் செய்யக் கூடாது. ஒத்திப்போடுவது கூடாது.
சமுதாயத்திலிருக்கும் அறிஞர்களை அலட்சியம் செய்யக் கூடாது.
சோம்பேறித்தனம் உள்ளவன் நல்ல தலைவனாக முடியாது.
புலனக்கமில்லாதவன் தலைவனாக இருக்கத் தகுதியற்றவன்.
அமைச்சர்களை அலட்சியப்படுத்தி அவர்களை கலந்தாலோசிக்காமல் தனியாக முடிவெடுக்கக் கூடாது.
திறமையற்றவரை தம் குழுவில் சேர்த்துக் கொண்டு அவரிடம் ஆலோசனை கேட்பது தவறு.
தீர்மானித்த திட்டங்களை உடனே செய்யல்படுத்தாமலிருப்பது இயற்கைக்கு விரோதம்.
தன் குழுவினரோடு செய்த ரகசிய ஆலோசனையை வெளியிடக் கூடாது.
சாஸ்திர சம்மதமில்லாத அமங்கலமான செயல்களைச் செய்யக்கூடாது.
சரியான மதிப்பீடின்றி ஒரே நேரத்தில் பல பகைவர்களை எதிர்ப்பது தவறு.
சுபம்!