- கங்கோத்பத்தி… இன்று வைசாக சுத்த சப்தமி…
- கங்கை நதி பூமிக்கு இறங்கி வந்த நாள்.
- கங்கோத்பத்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
முன்பொரு காலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த சகர சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது யாகத்திற்கான குதிரையை அவிழ்த்து விட்டார். அந்த யாகம் முழுமையடைந்தால் அவர் சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆகலாம் என்று இந்திரன் அஞ்சி அந்த குதிரையைத் திருடி கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்து சென்றான்.
சகர சக்கரவர்த்திக்கு 60,000 புதல்வர்கள். அவர்கள் அனைவரும் யாகத்திற்கான குதிரையை தேடிக்கொண்டு கபில முனி ஆசிரமம் அருகில் குதிரை இருப்பதைக் கண்டு அந்த முனிவரே குதிரையைத் திருடி கட்டி வைத்துள்ளார் என்று அவருடைய தவத்திற்கு தடை செய்தார்கள். அவருடைய அனுமதி பெறாமலேயே அந்த குதிரையை எடுத்துக் செல்ல நினைத்தார்கள். அவர்களுடைய நடவடிக்கை அந்த முனிவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் முனியின் கோப அக்னியால் சாம்பலாகி போனார்கள்.
சகர அரசனின் பேரன் அம்சுமந்தன் சகர புதல்வர்களை தேடிக்கொண்டு சென்று கபில முனி ஆசிரமத்தில் சகர புதல்வர்கள் சாம்பல் குவியலாக இருப்பதை கண்டான்.
கபில முனிவரை பல விதங்களிலும் வணங்கி நமஸ்கரித்து அவருடைய அனுமதியோடு குதிரையைப் பெற்றான். சகர சக்கரவர்த்தி அசுவமேத யாகத்தை பூர்த்தி செய்தார். ஆனால் முதல்வர்கள் அனைவரும் மரணமடைந்ததால் மிகவும் துக்கப்பட்டார்
அம்சுமந்தனுக்கு கபில முனிவர் சகர புத்திரர்கள் உய்வடையும்வ
உபாயத்தை தெரிவித்தார்.
உங்கள் வம்சத்தில் மூன்றாவது தலைமுறையில் பிறப்பவர் நீண்ட காலம் தவம் செய்து கங்கையை பூமிக்கு அழைத்து வந்தால் அந்த ஜலத்தால் சகர புத்திரர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
சகர புதல்வரின் மனைவியர் மிகவும் துயரத்தோடு ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார்கள். அவர்கள் பூஜைக்கு மகிழ்ந்த ஶ்ரீமகாவிஷ்ணு பகீரதன் என்ற புதல்வனை அவர்களுக்கு அருளினார்.
சகர சக்கரவர்த்தியின் வம்சத்தில் பிறந்த பகீரதன் தன் முன்னோர்களுக்கு புண்ணிய லோகங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று எண்ணி கங்கைக்காக பிரம்மாவை உத்தேசித்து தவம் செய்தான். பிரம்மா அவனுடைய தவத்திற்கு மெச்சி வரம் அளித்தார். கங்கா தேவியும் அபயம் அளித்தாள்.
ஆகாயத்திலிருந்து மிகவும் உக்கிரமாக வந்து விழும் ஜலப் பொழிவை பூமி தாங்காது என்று பகீரதனிடம் கூறினாள்.
தன் சங்கல்பத்தை விடாத திட நிச்சயம் கொண்ட பகீரதன் கருணைக்கடலான பரமேஸ்வரனை உத்தேசித்து தவம் செய்தான். கங்கையை ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி வரச் சொன்னார் சிவ பெருமான். அமர லோகத்தை விட்டு கிளம்பிய கங்கா ஆகாயத்திலிருந்து மகா வேகமாக பூமிக்கு குதித்து வந்தபோது அந்த அளவுக்கதிகமான பொழிவை கைலாசநாதர் தன் ஜடாமகுடத்தில் கட்டிவிட்டார். கங்கா சுற்றிச் சுழன்று கொண்டு கங்காதரன் சிரசின் மீதே நின்று விட்டது. பகீரதனின் விண்ணப்பத்தை கேட்டு கைலாசநாதர் மகிழ்ந்து கருணையோடு கங்கையை விடுவித்தார்.
பொங்கிப் புரண்டு வந்த கங்கா நதி ஹிமகிரி சிகரத்தில் முதல் முதலில் விழுந்து அங்கிருந்து வழிந்தது. சீதா, அலக்நந்தா, சக்ஷு, பத்ரா என்ற நான்கு கிளை நதிகளாக பிரிந்து நான்கு திசைகளிலும் பாய்ந்தது.
அலகநந்தா நதி ஹேமகூட பருவத்தை தாண்டி மகா வேகமாக பாய்ந்து ஜக்னு மகரிஷி ஆசிரமத்தில் பிரவேசித்தது. மகரிஷி ஆசிரமம் கங்கை நீரில் மூழ்கியது. சினமடைந்த மகரிஷி கங்கா பிரவாகத்தை ஆசமனம் செய்து குடித்து விட்டார். பகீரதன் அந்த முனிவரை மகிழ்விக்க மிகவும் பிரயத்தனம் செய்தான். கங்கா
ஜஹ்னு முனிவரின் செவி வழியாக வெளியில் வந்து ஜாஹ்னவி என்ற பெயரோடு தொடர்ந்து பாய்ந்து பகீரதனின் பின்னால் பாதாள லோகத்தை அடைந்து சாம்பல் குவியலாக இருந்த சகர புத்திரர்களை நனைத்து அவர்களுக்கு நற்கதியை அருளியது.
தகர்க்க இயலாத பர்வதங்களையும் தகர்த்த கங்கையை சமதள பூமி மீது அழைத்து வந்த பெருமை பகீரதனுக்குக் கிடைத்தது. அதனால்தான் கங்கா பாகீரதி என்று அழைக்கப்படுகிறாள்.
கங்கோத்ரியிலிருந்து துள்ளி குதித்த பாவனியான கங்கா பவானி, பூமிக்கு இறங்கிய இடம் ஆதலால் ஹரித்வார் என்பதை கங்காத்வாரம் என்று அழைப்பார்கள். இந்த துவாரம் சுவர்க்கத்திற்கு சமமானது.
ஹரித்வாரில் கங்கா ஸ்நானம் செய்பவர்களுக்கு கோடி தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இந்த க்ஷேத்திரத்தில் கங்கா ஸ்நானம் செய்பவர்களுக்கு புண்டரீக யாகத்தின் பலன் கிடைக்கிறது. இங்கு ஒரு இரவு நிவாசம் செய்தால் ஆயிரம் கோதானம் செய்த புண்ணிய பலனும் கிடைக்கிறது.
தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்