மனிதப் பிறவி என்பது கிடைப்பதற்கு துர்லபமானது என்று எல்லோருக்கும் தெரியும். நம்முடைய சென்ற பிறவியில் நாம் செய்த எண்ணற்ற புண்ணிய கர்மாக்களின் விளைவாகத்தான் இப்போது நமக்கு மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது.
அப்படியிருக்கையில், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒருவனுக்கு இருந்தால், பக்தி போன்ற சாதனங்களை ஒருவன் கடைப்பிடித்தல் மிக அவசியமாகும்.
எத்தனையோ இலக்க்ஷம் ஜீவராசிகள் இருந்தாலும் மனுஷ்யனுக்கு மட்டும் பிராதான்யத்தை (முக்கியத்துவம்) சாஸ்திரத்தில் ஏன் கொடுத்தார்கள்? தன்னுடைய ஆகாரத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் விஷயத்தில் மனுஷ்யனும் மீதி பிராணிகளும் சமம்தான்.
இந்த விஷயத்தில் பச்வாதிபி: ச அவிசேஷாத் என்று பகவத்பாதாள் சொன்ன மாதிரி, மீதி பிராணிகளுக்கும் நமக்கும் எந்த வித்யாஸமும் இல்லை என்று சொல்ல முடியுமா என்றால், அதுவும் சொல்ல முடியாது.
நிச்சயமாக வித்யாஸம் இருக்கின்றது. எந்த விஷயத்தில் வித்யாஸம் இருக்கின்றது என்று கேட்டால், நமக்குப் பெரிய விவேகத்தை பகவான் கொடுத்தான். நம்முடைய விவேகத்தினால் எது ஹிதம் (நன்மை), எது அஹிதம் (தீமை), எது உபாதேயம்(ஏற்றுக் கொள்ள வேண்டியது), எது பரித்யாஜ்யம்(விட்டுவிட வேண்டியது) இத்தனையையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
அப்படிப்பட்ட விவேகிகள் கோஷ்டியைச் சேர்ந்த நமக்கு ஈச்வர விஷயத்தில், அதிர்ஷ்ட விஷயத்தில் விசுவாசம் இல்லாமல் இருப்பது ரொம்ப அனுசிதம் ( பொருத்தமில்லை).