அம்பிகையின் மகிமை – 9
நம்மில் சிலருக்குப் பண்டிதர்கள் ஆகவேண்டுமென்று ஆசை உள்ளது. மனதில் இருக்கும் விஷயம்கூட சில சமயம் நமக்கு மறந்துவிடுகிறது. விஷயங்கள் வேண்டிய பொழுது தோன்றுவதுமில்லை.
படிக்கும்போதோ படிக்கும் விஷயம் தலையில் ஏறுவதேயில்லை. கருத்துக்கள் தோன்ற வேண்டுமானால் என்ன செய்வது? ‘ ப்ராஹ்மீகுடீ’, ‘ப்ராஹ்மீரஸாயனம்’ போன்ற மருந்துகளை உபயோகப்படுத்துங்கள் என்று சிலர் சொல்வர்.
ஆனால் இவையும் பயன்படவில்லையென்றால் என்ன செய்வது? அம்பாளின் கிருபைதான் மிகவும் முக்கியமானது.
“ வர்காஷ்டகமிலிதாபி : வசினீமுக்யாபிராவ்ருதாம் |
சிந்தயதாம் ஸிதவர்ணாம் வாசோ நிர்யாந்தி அயத்னதோ வதனாத் || “
( “ எட்டு வர்கங்களும் பொருந்தியவள் – வசினீ போன்ற தேவதைகளால் சூழப்பட்டுள்ளவள் “ – இவ்வாறு உன்னை வெண்மை பொருந்தியவளாகச் சிந்திப்பவர்களுடைய வாயிலிருந்து சொற்கள் தாமாகவே வருகின்றன.)
“ நீ அதிகமாய் முயற்சி ஒன்றும் செய்யவேண்டியதில்லை; அமர்ந்துகொள், எதைச் சொல்ல வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். பேச்சைத் தொடங்கிவிடு. அம்பாள் பேச வைப்பாள். ஜனங்கள் புரிந்துகொள்வார்கள். நீ பேசிக் கொண்டிருப்பாய்” (என்று அம்பாளை அவ்விதம் உபாஸிப்பவர்களிடத்தே நாம் கூறலாம்.)