காரடையான் நோன்பு 14-03-2018
“ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வர்”
சரடு கழுத்தில் கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா
ஸ்லோகத்தின் அர்த்தம்:
ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்.
கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர்.
பெண்களுக்கும் அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுளையும் அன்பையும் வளர்க்கும் இந்த விரதத்தை முதன் முதலாக செய்து காட்டி, தனது கணவன் ஸத்யவானை யமனிடமிருந்து மீட்டாள் பதிவ்ருதையான ஸாவித்ரீ தேவி.
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்க இருக்கும் நேரத்திற்கு சற்று முன்பாகவே, அதாவது மாசியிலேயே ஸுமங்கலிப் பெண்கள் நியமத்துடன் இருந்து இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்.
வீட்டில் தெய்வ ஸந்நதியில் கோலம் போட்டு, விளக்கேற்றி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலை வீதம் எண்ணி நுனி வாழை இலைகளாகக் கோலத்தின் மீது [நுனிப்பகுதி வடக்கு நோக்கி இருக்குமாறு] போட வேண்டும். அந்த இலைகளின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நடுவில் பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையில் நடுப்பகுதியில் இரண்டு வெல்ல அடைகளும் வெண்ணெயும் வைக்க வேண்டும். [இதை வெல்லக் கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்]
குடும்பத்தில் வயதான பெண்களில் ஒருவர் மட்டும், தங்கள் இலையில் மட்டும், அம்மனுக்குக் கட்ட என்று ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் போடப்பட்டுள்ள நுனி இலைகள் 1,3,5,7,9 என ஒற்றைப்படையில் வருமேயானால், ஒரு இலையை அதிகமாகப்போட்டு 2,4,6,8,10 என இரட்டைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு இலைக்கு முன்பாகவும் நின்று கொண்டு ஜலத்தினால் மும்முறை இலையைச்சுற்றி விட்டு, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் உண்டானாலும், ஒருக்காலும் என்னை விட்டு, என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்” என்னும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.
பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் தெய்வ ஸந்நதியில் அமர்ந்து கொண்டு, ஒரு சரட்டினை அம்மனுக்குக் கட்டிவிட்டு, மற்றொரு சரட்டினை
தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா
– என்ற ஸ்லோகம் சொல்லியபடி தானும் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அதே போல கட்டி விட வேண்டும்.
பிறகு அடையில் ஒன்றை தனது கணவருக்கு என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, கணவரிடம் அதைக் கொடுத்து சாப்பிடச் சொல்ல வேண்டும். தானும் மற்றொரு அடையைச் சாப்பிட வேண்டும். தயார் செய்த அடையில் [கொழுக்கட்டைகளில்] இரண்டு அடைகளை [கொழுக்கட்டைகளை] மறுநாள் காலையில் பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
இவ்விதம் காரடையான் நோன்பைச் செய்வதால், நோன்பு செய்யும் பெண்களுக்கும், அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அன்பு பெருகும்.
பின் குறிப்பு : இந்த வெல்லக்கொழுக்கட்டை மற்றும் உப்புக்கொழுக்கட்டையை புதிதாகச் செய்பவர்கள், அவற்றை எப்படிச்செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை, இதை நன்றாக செய்து அனுபவமுள்ளவர்களிடம், தயவுசெய்து கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யவும். அப்போது தான் அது பூப்போல மிருதுவாகவும். வாய்க்கு ருசியாகவும், சாப்பிடத் திருப்தியாகவும் அமையும்.
இல்லாவிட்டால் ஒரேயடியாக ரப்பர் பேப்பர் வெயிட் போல கடினமாக அமைந்து விடும். கையினால் புட்டுச் சாப்பிட முடியாமல் காய்ந்து போன கோந்துக்கட்டி போல கெட்டியாகி வாய்க்கு ருசிப்படாமல், பற்களில் ஈஷிக்கொண்டு படாதபாடு படுத்திவிடும். ஆசையாக சாப்பிட வாயில் போடும் போது, தப்பித்தவறி காலில் விழுந்து விட்டால் கால் நகத்தையே பெயர்த்து விடும்.
மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும். இது நகைச்சுவைக்காக மட்டும் நான் எழுதவில்லை. எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! தீர்க்க சுமங்கலி பவ !