திருப்பூர்: திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
செவ்வாய் காலை நடந்த சிலம்பாத்தாள் சாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; தொடர்ந்து மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடந்தது.
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சிலம்பாத்தாளும், பெத்தாயம்மனும், கருப்பண்ணசாமி காவலுடன் அருள்பாலித்து வருகின்றனர்.
கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாக விழா எடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிலம்பாத்தாள், பெத்தாயம்மன், கருப்பசாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து புண்ணியார்ச்சனை நடந்தது. இதையடுத்து வெங்கக்கல் மேட்டிலிருந்து அரிசி அம்மை அழைத்து வந்து சிலம்பாத்தாள் குட்டையில் அரிசி மாற்றப்பட்டது.
செவ்வாய் காலை சிலம்பாத்தாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் தீக்குழி பாயும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மஞ்சள், பூவினால் சாமி செய்யப்பட்டு, பச்சை குருத்தோலை, வாழை மட்டையில் அலங்காரம் செய்யப்பட்ட மணவறையில் திருக்கல்யாணபூஜைகள் நடந்தது.
தொடர்ந்து குதிரை மீது சாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.அப்போது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பம்பை மேளமும், அதிர்வேட்டுகளும் முழங்க வந்த சிலம்பாத்தாள் ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடிப்பாடி கொண்டாடி வந்தனர்.
வழியில் வீடு தோறும் ஆரத்தி எடுத்தும், தண்ணீர் ஊற்றியும் சாமியை வரவேற்றனர்.
ஊர்வலமாக சிலம்பாத்தாள் குட்டைக்கு எடுத்து வரப்பட்டு தீக்குழி பாயும் நிகழ்ச்சி நடந்தவுடன் அனைவருக்கும் பூ, மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல நேற்று மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாணம், தீக்குழி பாயும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.