சபரிமலை பக்தர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வளம் கொழிக்கும் தேவஸ்தானம், தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில், நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அரசு பேருந்துகளையே பக்தர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு வசூலிக்கப் படும் கட்டணம் மிக அதிகம். மேலும், பேருந்துகள் பற்றாக்குறை என்பதால், கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் செல்ல வேண்டிய சூழல்!
இந்நிலையில், அந்த பேருந்து இயக்கத்தை தாங்களே இலவசமாக செய்து தருவதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவருக்கு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் எழுதியுள்ள கடிதத்தில்…
கேரள அரசுப் பேருந்துகள் நிலக் கல்லில் இருந்து பம்பைக்கு விடப்படுபவற்றில், மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப் படும் விவகாரம் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், இது சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களை பெரிதும் வருத்தப்படச் செய்ததாகவும் கூறப்பட்டது
இந்த வகையில் சபரிமலை ஐயப்ப சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்ததாகவும், அதன்படி அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் பேருந்து இயக்குபவர்கள் மற்றும் தனி நபர்களிடம் கேட்டு, நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு இயக்க குறைந்தபட்சம் நூறு பேருந்துகளையும் ஓட்டுநர்களையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு வழங்குவதாகவும், அதை சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாகவே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும் அழைத்துச் சென்று விடுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான செலவினங்களை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி ஒரு கடிதத்தை வழங்கியிருக்கிறார்கள் .
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச் செயலர் ஈரோடு என்.ராஜன் பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.