பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தை மாதப் பிறப்பு அன்று, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஜன.19ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.
முன்னதாக, கார்த்திகை மாதம் முதல் தேதியில் மண்டல பூஜை காலத்துக்காகத் திறக்கப் பட்ட சுவாமி சந்நிதி நடை, 27-ம் தேதி இரவு, 11 மணிக்கு மண்டல கால பூஜைகள் முடிந்து அடைக்கப்பட்டது. அதன் பின் மகரவிளக்கு
காலத்துக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன.
மகரவிளக்கு பூஜை காலத்துக்குத் தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. ஆலய சுற்றுப் புறம் தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது. மாலை, 5 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, சுவாமி சந்நிதியின் நடையைத் திறந்து தீபம் ஏற்றுகிறார்.
இன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. இன்று இரவு வழக்கம்போல் 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப் படும். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.
மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைக்கிறார்.
சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள், 12-ம் தேதி
பந்தளத்தில் இருந்து புறப்படுகின்றன.
ஜன.18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். மகரஜோதி தரிசனம் ஜன.14ஆம் தேதி நடைபெறுகிறது.