குற்றாலம் பராசக்தி கல்லூரியில் மாணவிகள் பங்கேற்ற ஆண்டாள் திருக்கல்யாணம்
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 54வது ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தையொட்டி மார்கழி மாதம் 30 நாட்களும் விடுதி மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை பாடி விரதமிருந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாகஇன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. முதல்வர் தலைமை வகித்தார். ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் ஐஸ்வர்யா ஆண்டாளாகவும், சாந்தி ஸ்ரீ ரங்கமன்னாராகவும் கருதப்பட்டு திருமண நிகழ்வு போன்றே நிச்சயதார்த்தம், முளைப்பாரி, காப்பு கட்டுதல், கன்னிகாஸ்தானம், விஷ்ணுஹோமம், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு, தொடர்ந்து ஆண்டாள் படத்திற்கு திருமாங்கல்யநாண் பூட்டுதல், மாலை மாற்றுதல், மெட்டி அணிதல், அம்மி மிதித்தல், நலுங்கு, பூப்பந்து எறிதல், பொரியிடுதல், ஆரத்தி எடுத்தல், மொய்செய்தல் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் நடந்தன.
ஆண்டாள் திருக்கல்யாணத்தை தெற்குமாசி வீதி கணபதி சாஸ்திரி உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர். திருக்கோயில்களில் மட்டுமே நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு நெல்லை மாவட்டத்தில் பராசக்தி மகளிர் கல்லூரியில் மட்டுமே நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகளை முதல்வர், மற்றும் பேராசிரியைகள், விடுதி மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.