எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் குரு பூஜை 23-03-2019 இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மையாருக்கு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு புறப்பாடும் அதைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கும் ஐக்கிய காட்சி நடைபெறும்.
“இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண ஏழுலகும் போற்றிசைப்ப எமையாளும் அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் ஆலங்காடாம்”
இது ஞானசம்பந்தப்பெருமான் எண்ணத்தில் உதயமான செய்தி அதனால் திருவாலங்காட்டை மிதிக்க அஞ்சி புறத்திலேயே மடத்தில் தங்குகிறார்.
காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு வரும்பொழுது இங்கு இருக்கும் கற்கள் எல்லாம் சிவலிங்கமாகவே அவருக்கு காட்சியாக இறைவன் கொடுத்தான்.
அதனாலேயே திருவாலங்காடு தலையாலேயே நடந்து வருகிறார். கைலாயத்திலும் அவருக்கு இவ்வாறே காட்சி கிடைத்தது கைலாயத்தையும் அவர் தலையாலேயே நடந்து செல்கிறார்.
அதனால் கைலாயமும் திருவாலங்காடும் ஒன்றே ஆகும். சிவனாரால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருந்தகையார் இவராவார். இவர் அடியார்களுக்கு தொண்டு செய்யும் பொழுது தம்மை தாயாக பாவித்து தொண்டு செய்தார்.
அம்மையார் கணவனார் தனதத்தனிடம் ,ஓரிரண்டு மாங்கனிகள் அவரிடம், வந்தணைந்தோர் கொடுக்கின்றனர். இந்த மாங்கனிகளை இல்லத்திலே புனிதவதியாரிடம் (காரைக்கால் அம்மையார்)கொடுக்குமாறு கூறுகிறார். அம்மையாரும் அதை வாங்கி பத்திரமாக வைக்கிறார்.
அந்நேரம் பரமனார் திருத்தொண்டர் மிகவும் பசித்திருந்து வருகிறார். “வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த்தொண்டர் நாதன் அடியாரை பசி தீர்ப்பேன்”என எண்ணி பாதம் விளக்க நீர் வைத்து உபச்சாரம் செய்கிறார்.
அவர் மிகவும் பசித்திருக்க கறியமுது செய்வதற்கு காலம் ஆகும் என்று தாய் போல உடனே பசி தீர்க்க தன் கணவனார் கொடுத்த மாங்கனி ஒன்றை எடுத்து கொடுத்து வந்த திருத்தொண்டர் பசி ஆற்றுவார். தொண்டரும் மனமுவந்து போவார்.
இந்த இடத்தில் அம்மையார் கணவன் சொல்லை விட, (கற்பு நெறி) சிவனடியாரின் பசியைப் போக்குவதே (சிவநெறி) மிகப்பெரும் செயல் என்று அதை நிறைவேற்றுகிறார்.
சிவ புண்ணியத்திற்காக எந்த புண்ணியத்தையும் விலக்கலாம். வேறு தர்மங்களுக்காக சிவ தர்மத்தை விடக்கூடாது. பிறகு கணவனார் மாங்கனி கேட்க இறைவனாரிடம் கேட்டு அம்மையார் மாங்கனி பெற்றுத் தருகிறார்.
பிறகு அம்மையார் தெய்வீக பிறவி என்று பரமதத்தன் ஒதுங்கி விடுகிறார். காரைக்கால் அம்மையாரும் பேய் திருவுருவம் பெற்று சிவனாருக்கு பதிகம் பாடி பூஜை செய்கிறார்.
எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் வட திசை எல்லாம் சென்று கைலாயம் சென்றடைந்தார். கைலாயம் கண்டவுடன் கால்நடையை தவிர்த்து தலையாலே நடந்து செல்கிறார்.
அப்பொழுது இறைவனார் ஒரு பாகம் பெற்ற அந்த இமய வல்லி தன் திரு கண்ணால் நோக்குகிறாள். அம்பிகை அதிசயத்துடன் பேய் உருவம் தாங்கி தலையினால் நடந்து வரும் அன்புதான் என்னே! என இறைவனிடம் கேட்க”
வரும் “இவள் நம்மைப் பேணும் அம்மை காண் பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்”என்று சொல்லி காரைக்கால் அம்மையாரை,உலக உயிர்கள் இன்பம் துய்க்க நான் மறையும் ஆகமங்களும் அருளிச்செய்த வாக்கால் “அம்மையே” என்று அழைக்கிறார்
- குட்டி வேணுகோபால்