ஜெய் ஸ்ரீராம் – மமதாவின் மதியீனம்
நான், எனது என்று சொல்வது நமக்கு நாமே எமனை அழைப்பது போன்றதாகும் என்பர் பெரியோர். அதாவது, ஸம்ஸ்க்ருதத்தில், ‘அஹம்’, ‘மம’ என்பது இரண்டெழுத்துள்ள சொற்கள். நான் என்றும், எனது என்றும் இது அகங்காரத்தைக் காட்டும். அகங்காரத்தை விட மதியீனம் வேறொன்றும் இல்லையாம். ‘எல்லாம் நான்; எனதே அனைத்தும்’ எனும் கர்வம் உண்டாகும். இது மற்றவர்களுக்கு மதிப்பளிக்காது; மற்றவரின் பெருமையை பொறுக்காது; குறிப்பாக, நல்லுபதேசங்களும் நல்ல விஷயங்களும் காதில் ஏறாது; இவையனைத்தையும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதன் பெயர் ‘மமதா!‘
மமதா – கர்வம், அகங்காரம், ஆணவம், அலட்சியம் எனப் பல அர்த்தங்கள் இந்த சொல்லுக்கு விளக்கமாயுள்ளன. எவரையும் மதிக்காமல், ஆணவமாக, இறைவனின் திருநாமம் கேட்டால், அது கூட பொறுக்க முடியாததாக இருக்கும் தன்மைக்குத்தான், “மமதா” என்பது பெயர்.
இந்த மமதையால் மதியிழந்து மாண்டவர்கள் அனேகம் பேர்கள் உள்ளனர். அவர்களைக் கணக்கெடுக்க நமது ஒரு ஆயுள் போதாது. மமதையால் மாண்டவர்களில் இருவரைக் காணலாம்.
ஒருவன் துர்யோதனன். அகங்காரமே வடிவு கொண்டு வந்தவன். மற்றொருவன் ராவணன். இவர்கள் இருவருமே மமதையின் மொத்த வடிவங்கள். “எங்களை இரண்டாகப் பிளந்து வெட்டினால் கூட, எவருக்கும் தலை வணங்க மாட்டோம்” என்று ஆணவத்துடன் அலைந்தவர்கள். வணங்காமுடியாக இருப்பது பெருமை என நினைத்து ஆணவத்தால் (மமதையால்) அழிந்தவர்கள்.
இவர்களில் ராவணன் நிலை மிக மிக மோசமானது. காமம், க்ரோதம், லோபம், மதம் என அனைத்தும் அவனிடம் நிலை கொண்டிருந்தன. வங்கக் கடலான இந்து சமுத்ரத்தைக் கடந்து, நரேந்த்ரனாகிய ராமதூதன் அனுமான், “ஜய் ஸ்ரீராம்” என்று லங்கையினுள் நுழைந்தான்.
த்ரிகூட மலையிலிருந்து லங்கையைக் கண்டு, அதனுள் புகுந்து ஒவ்வொரு அடிவைப்பிலும் “ஜய் ஸ்ரீராம்“ என முழங்கி வெற்றி பெற்றான்.
மமதை கொண்ட ராவணன், நரேந்த்ரதாசன் அனுமன் வாலில் வைத்த நெருப்பு, லங்கையைச் சுட்டது. கண்ணெதிரே தனது கோட்டை தகர்ந்தது பொறுக்காமல் மேலும் கோபாவேசமானான் மமதன் ராவணன்.
அவனது அமைச்சரவையில் இருந்த அவன் தம்பி மற்றும் நான்கு அமைச்சர்களும், “ஜய் ஸ்ரீராம்” என்று கூறி, நரேந்த்ரன் ராமனின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்தனர். “அங்கதன் முதலானோரும் “அகந்தை கொள்ளாதே” என்று மமதா உருக்கொண்ட ராவணனுக்கு உபதேசித்தனர்”. இது எதுவும் பயனளிக்கவில்லை. தன் ராஜ்ஜியத்தில் எவராவது ராமன் பேரைச் சொன்னால், அவர்களுக்குக் கடும் தண்டனையும் அளித்தான்.
தனக்கிருந்த இருபது காதுகளில் ஒரு காதில் கூட “ஜய் ஸ்ரீராம்” என்னும் ராமநாமம் விழக்கூடாது எனும் மமதையில் இருந்த ராவணன் முடிவு, இறுதியில் என்னவானது? என்பதை நாமறிவோமல்லவா! ராமனின் பெருமைக்கு முன்பாக, ராவணின் மமதை த்ருணமூலம்!!
அதிகார வர்க்கமும், ஆணவமும், ஐச்வர்ய மமதையும் கொண்டுள்ள ராவணின் த்ரிணமூலமான(புல்லுக்குச் சமமான) அமைச்சரவையிலிருந்து, விபீஷணன், நான்கு அமைச்சர்களுடன் வெளிநடப்பு செய்தான். அதாவது, ஜய் ஸ்ரீராம் என்று கூறியபடி, நரேந்த்ரனாகிய ராமபிரான் திருவடித் தாமரைகளில், பாதுகாப்பு வேண்டி, அடைக்கலம் புகுந்தான்!
எனவே நரேந்த்ரன் ராமனின் தாமரைப் பாதங்களைத் தஞ்சமாக அடைந்து மமதையை ஒழித்து மகிழ்ந்திடலாம்.
ஜய் ஸ்ரீராம்
இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
அன்புடன்,
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.
Sri APN Swami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..