ஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?
வேதம் ‘தூர்வா’ எனப்படும் அருகம்புல் பற்றி சிறப்பாக வர்ணிகிறது. நாம் சாதாரணமாக நினைக்கும் அருகம்புல்லில் உள்ள தெய்வீக சக்தியை ருஷிகள் தரிசித்தார்கள்.
அருகம்புல் மிக விரைவாக முளைக்க கூடியது. அதற்காக தனியாக பயிரிடத் தேவையில்லை. அருகம்புல் எல்லா நாடுகளிலும் வளர்வதில்லை. இது பாரத பூமியின் சிறப்பு.
சில பிரத்தியேகமான தட்ப வெப்பநிலையில் வளரக்கூடியது. மழை பெய்தவுடன் பூமியிலிருந்து முதலில் வரக்கூடியது புல்தான். ஆனால் எல்லா புல்லும் கணபதி வழிபாட்டுக்கு உகந்ததல்ல. தூர்வா எனப்படும் அருகம்புல் சிறப்பான வடிவம் கொண்டது.
தனியாக ஒரு அருகம்புல்லை கையில் எடுத்துப் பார்த்தாலே அதன் அழகு தெரியும். நம் கண்ணிற்கு சாதாரணமாகத் தென்படும் அருகம்புல்லில் எத்தனை அழகு உள்ளது என்பது தேவதைகளுக்கு தெரியும். சிறிய அருகம்புல்லில் அத்தனை சிறப்பு உள்ளது.
தூர்வா பற்றிய பிரத்தியேகமான ‘சூக்தம்’ வேதத்தில் காணப்படுகிறது. “சர்வகும் ஹரதுமே பாபம் தூர்வா துஸ்வப்ன நாசினீ ! காண்டாத்காண்டாத் புரோஹந்தி பருஷப்பருஷப் பரி !” என்று வர்ணிக்கிறது வேதம்.
அருகம்புல் பெரிய முயற்சியின்றி எத்தனை எளிதாக வளர்கிறதோ பிள்ளையார் கூட அதேபோல் நாம் நமஸ்காரம் செய்த உடனே நமக்குத் தேவையானவற்றை அருளக் கூடியவர். ‘சுலப பிரசன்ன குணம்’ அருகம்புல்லிலும் பிள்ளையாரிலும் அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல. தூர்வா என்ற நாமம் கூட கணபதிக்கு மிகவும் பிரியமானது.
வேதத்தில் கூறப்பட்ட தூர்வா சூக்தத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொண்டால் அருகம்புல்லைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதை அறியலாம்.
அருகம்புல்லைத் தொட்டு கையில் எடுத்து கணபதிக்கு சமர்ப்பித்தால் பல விதமான தோஷங்கள் விலகிப் போகும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது. கணபதிக்கு அருகம்புல் மீது உள்ள பிரியம் பற்றிய புராணங்களில் பலப்பல கதைகள் உள்ளன.
அர்ச்சனை செய்யும்போது “தூர்வாயுக்மம்” அதாவது இரண்டிரண்டு அருகம்புல்லாகப் பயன்படுத்தவேண்டும் என்றும் ஹோமம் செய்யும்போது மூன்று மூன்றாக அருகம்புல்லை சமர்ப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது.
அருகம்புல்லால் துர்க்கையைத் தவிர பிற அனைத்து தெய்வங்களையும் அர்ச்சனை செய்யலாம் என்று பஞ்சாயதன பூஜை விதானம் கூறுகிறது. துருவன் மகாவிஷ்ணுவை அருகம்புல்லால் பூஜை செய்தான் என்று கவி போத்தனா தெலுங்கு பாகவதத்தில் வர்ணிக்கிறார்.
கணபதிக்கு அருகம்புல்லை சமர்ப்பிப்பதில் உள்ள சிறப்பு என்னவென்றால் “காண்டாத்காண்டாத் புரோஹந்தி…”! அதாவது ஒரு முறை முளைத்து விட்டால் அதன் ஒவ்வொரு கணுவிலிருந்தும் மீண்டும் மற்றொரு கிளை தொடர்ந்து வளரும்.
அதே போல் நமக்கு நலன்கள் கூட ஒன்றிலிருந்து ஒன்றாக அபிவிருத்தி அடைந்து பரம்பரையாக வளரவேண்டும் என்ற தத்துவம் அருகம்புல் பூஜையில் உள்ளது. அந்த இலையில் இயல்பிலேயே தெய்வீகம் உள்ளது. அதனை ருஷிகள் கண்டறிந்து அருகம்புல் அர்ச்சனை வழிமுறையை ஏற்படுத்தி உள்ளார்கள்.
அதோடு கணேச புராணம், “எண்பதாயிரம் மகரிஷிகள் கணபதியை ஆனந்தமடையச் செய்வதற்கு அருகம்புல்லால் மட்டுமே பூஜை செய்தார்கள்” என்று கூறுகிறது. முத்கல புராணத்தில் பிள்ளையார், “தங்கப் பூக்களால் பூஜை செய்தால் நான் மகிழ மாட்டேன். அருகம்புல் பூஜைக்கு ஆனந்தமடைவேன்” என்று கூறியுள்ளார்.
பிள்ளையாரின் “சுலபப் பிரசன்ன” குணமும், “அபீஷ்ட சித்தி” அருளும் இயல்பும் அருகம்புல் பூஜையின் மூலம் பெறப்படுகிறது.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்