நவராத்திரி ஸ்பெஷல்…
ஆன்மீக கேள்வி பதில்.!
கேள்வி: லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் எந்த புராணத்தில் உள்ளது? லலிதா சகஸ்ரம் பிடிப்பதால் வரும் நன்மை என்ன?
பதில்: லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் உள்ளது. இதனை சாட்சாத் ஹயக்ரீவ சுவாமி அகஸ்திய மகரிஷிக்கு உபதேசித்தார்.
லலிதா தேவியின் வரலாற்றையும் லலிதா உபாசனைக்குத் தேவையான அனைத்து ரகசியங்களையும் அகஸ்தியருக்கு போதித்தார் ஹயகிரிவர்.
அதுமட்டுமல்ல. ராஜசியாமளா சகஸ்ரம், வாராஹி சஹஸ்ரம்… இவை அனைத்தையும் போதித்த பின் லலிதா சஹஸ்ரநாமத்தை போதித்து விவரிக்கிறார் ஹயக்ரீவர்.
லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால் வரும் நன்மை என்ன என்றால்… ஒன்றா? இரண்டா? அநேக அநேக நன்மைகள் உள்ளன. அனேக வழிமுறைகளும் உள்ளன.
பிரதி தினமும் லலிதா சஹஸ்ரநாமத்தை பக்தியோடு படித்தால் அது பலப்பல தோஷங்களை நீக்குவதோடு உள்ளத்தை தூய்மையாக்கி ஞானத்தையும் அளிக்கிறது. இது மிக முக்கியமான நன்மை.
ஆரோக்கியம் தேவை என்றால் ஒருவித உபாசனை வழிமுறை உள்ளது. அபீஷ்ட சித்திக்காக பல வழிமுறைகள் உள்ளன. செல்வம், சந்தானம்… இவ்வாறு காமிய பலனுக்காக ஒவ்வொரு பலனுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை ஒவ்வொரு பிரயோகத்தோடு படிக்கும் விதானம் உள்ளது.
இவற்றைக் குறித்து லலிதா சகஸ்ரநாமத்தின் பலஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அநேக நன்மைகளை அளிக்கக் கூடிய சக்தி லலிதா சகஸ்ரநாமத்தில் உள்ளது.
மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது வெறும் அம்பாளின் பெயர்கள் மட்டுமே அல்ல. இது ஒரு விஞ்ஞானம். இது ஒரு மந்திர சாஸ்திரம். இது ஒரு தர்ம சாஸ்திரம். இது ஒரு யோக விஞ்ஞானம். இது ஒரு தத்துவ விஞ்ஞானம். இவை அனைத்தும் லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ளன. உண்மையில் இதுபோன்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் வேறொன்று நமக்குக் கிடையாது. அத்தனை சிறப்பானது.
இதில் சில மந்திரங்கள் கொத்துக்கொத்தாக உள்ளன. சில நாமங்களின் வரிசையைப் பார்க்கும்போது அந்தந்த வரிசைக்கு ஒவ்வொரு பலன் இருக்கும். அதனால் முழுமையாக லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் செய்வதோடன்றி அதில் ஒவ்வொரு பலனை உத்தேசித்து ஒவ்வொன்றைத் தேர்ந்தெடுத்து ஜபம் செய்யும் வழிமுறை உள்ளது.
உதாரணத்திற்கு “சர்வவ்யாதி ப்ரசமனீ சர்வ ம்ருத்யு நிவாரிணீ !!” -112
இந்த நாமத்தை தினமும் தியானம் செய்து பல முறை ஜபம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
அதே போல் 143. பவதாவ ஸுதாவ்ருஷ்டி: பாபாரண்ய தவாநலா !தௌர்பாக்ய தூல வா தூலா ஜராத்வாந்தரவிப்ரபா !!
144. பாக்யாப்தி சந்த்ரிகா பக்தசித்த கேகி கநாகநா !ரோகபர்வத தம்போளிர் ம்ருத்யுதாரு குடாரிகா !!
இந்த நாமங்களின் கூட்டத்தை நிரந்தரம் ஜபம் செய்து வந்தால் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் விலக்கும் சக்தி இதில் உள்ளது.
இவ்வாறு ஆராய்ந்து விவரித்துக் கொண்டே போனால் லலிதா சஹஸ்ரநாமம் பலப் பல பலன்களை அளிக்கும் மகா கற்பக விருட்சம் என்பது புலனாகும்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்