தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்று வந்தன.
திருவிழாவின் 9-ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருள்னர்.
காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் சுவாமி தேரும், பின்னர் உலகம்மன் தேரும் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.
தேரோட்டத்திற்காக தேர்கள் அலங்கரிக்கும் பணியில் அறநிலையத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மாசித் திருவிழா வரும் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.