“காமாக்ஷியும் நானே!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பெரியவா முகாம் இட்டிருந்த அந்த ஊரில் ஒரு
பெண்மணிக்கு பெரியவா மேல் அபார பக்தி.
ஆனால், அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பிப் போய்
தரிசனம் செய்ய அவளால் முடியவில்லை.
குடும்பச் சூழ்நிலை அப்படி.
ஒரு நாள் எப்படியோ வீட்டிலிருந்து கிளம்பி
ஸ்ரீமடம் முகாமுக்கு வந்துவிட்டாள். பிற்பகல் நேரம்.
ஸ்ரீபெரியவா பூஜை மேடையிலேயே ஒரு பக்கம்
அமர்ந்து பலருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இந்தப் பெண்மணி, கையில் சூடம் வைத்த தட்டுடன்
ஹாரத்தி எடுக்க வேண்டும் என்று மேடை அருகில்
சென்று பெரியவா முகத்தைப் பார்த்தாள். ஆனால்
சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டார்,
பெரியவா. இதேபோல் இரண்டு,மூன்று முறை
முயன்றும் பெரியவா முகம் திரும்பிப் பார்க்கவில்லை.
இந்தப் பெண்மணிக்கு ரொம்ப துக்கம். பெரியவா
கொஞ்சம் திரும்பியது போல் இருந்த ஒரு
சந்தர்ப்பத்தில் கர்ப்பூரத்தை ஏற்றி விட்டாள்.
அருகில் போய் ஹாரத்தி ஏற்றுவதற்குள் பெரியவா
எழுந்து உள்ளே போய் விட்டார்கள். திகைத்துப் போனவள் “அம்பிகே! ஏன் இப்படி
சோதிக்கிறாய்? நான் என்ன பாவம் செய்தேண்?”-
என்று புலம்பிவிட்டு ‘சரி உனக்கே ஹாரத்தி எடுக்கிறேன்’
என்று பூஜையில் உள்ள அம்பாள் திருபுரசுந்தரிக்கே
எடுத்துவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும்
திரும்பி விட்டாள்.
அவள் பந்தலின் வெளியே வரும்போது ஒருவர் ஓடி வந்து
“அம்மா! பெரியவா உத்திரவாகிறது”- என்று சொன்னார்.
“என்னையா?- இருக்காது”-என்று தயங்கினாள், அவள்,
“உங்களைத்தான் அம்மா,வாருங்கள்” என்று சொல்ல,
தயங்கியபடி உள்ளே சென்றாள், அப்பெண்மணி.
அங்கு அமர்ந்திருந்த பெரியவா, ” எனக்கு ஏற்றிய சூடத்தை
அம்பாளிடம் எடுத்துவிட்டோம் என்று குறைப்படாதே.
இப்போ ஹாரத்தி காட்டு”- என்று சொன்னதும் அவள்
தட்டுத்தடுமாறி மறுபடி சூடத்தை எடுத்து தட்டில் வைத்து
கை நடுங்கப் பற்ற வைத்து பெரியவா அருகில் சென்று சுற்ற
அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாள்.
கரும்பு வில்லும்,பாராங்குசமும்,மந்த ஹாஸ முகமுமாக
அப்படியே அம்பாளாகவே பெரியவா காட்சி கொடுக்க
அந்த அம்மாள் மயங்கி விழாத குறையாய் ‘அம்மா அம்மா!’
என்று பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக்
கொண்டாராம்.
‘மேடையில் இருந்த அம்பாளும் நானும் ஒன்றுதான்!’
என்று புரிய வைத்த நிகழ்ச்சி இது.
(அந்தப் பெண்மணி திருச்சியை சேர்ந்த நாகலக்ஷ்மி.
அவரே என்னிடம் சொன்னார். பலமுறை பலபேருக்கு
மஹாபெரியவாள் அம்பாளாகக் காட்சியளித்ததை
அவர்களே சொல்ல நான் கேட்டிருக்கிறேன்-
![]()
ராதா ராமமூர்த்தி)