திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி நேற்று 5 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மற்றும் 19 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையோட்டி சொற்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி நேற்று கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( யுகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணி போர்த்தப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது.
பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்்டது.
கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் கோயில் ஜீயர்கள், செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.