இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் திருவண்ணாமலைக்கும் ஜன்மபந்தம் எனும் முடிச்சு போடப் பட்டிருக்கும் போலும்! திருவண்ணாமலைத் தலத்தின் மீது பெரும் பக்தி கொண்டிருப்பவர் இளையராஜா.
கடந்த வருடம் நடைபெற்ற தீபத்திருவிழாவின் போது, தனது காரில் வந்த இளையராஜா, கோவிலுக்கு வெகு தொலைவிலேயே காவலர் ஒருவரால் தடுத்து நிறுத்தப் பட்டு, இதற்கு மேல் கார் செல்லக் கூடாது என்று கூறியபோது, காரை விட்டுக் கீழிறங்கி, நானும் சாதாரண மனிதனே என்று நடந்து செல்ல ஆரம்பித்தார்.
திருவண்ணாமலை மண் கொடுத்த மகிமை கொண்ட நல்லுணர்வு அது. மகான்கள் போதித்த தத்துவ ஞானம்! அப்போது இளையராஜாவை செல்போன்களில் க்ளிக்கிக் கொண்டு பலரும் அதனை சமூகத் தளங்களில் பகிர்ந்தார்கள்.
தற்போது, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறைத் திருவிழா நடைபெற்று வருகிறது. பிப்.23 தொடங்கி, சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று தினங்களுக்கு இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலைத் திருக்கோயில் நான்காம் பிராகாரம் கலை அரங்கில் மூன்று நாட்களும் காலை மாலை இருவேளைகளிலும் திருமுறைகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் இளையராஜாவின் இசை வாரிசு கார்த்திக் ராஜா. இளையராஜா போன்றே பக்திப் பழமாக, திருவண்ணாமலையின் மீது அளவு கடந்த அன்புடன் மெய்சிலிர்க்கும் ஆன்மிகக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு நடந்து வந்தார்.