ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .
அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து, ”நமக் கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவர்கள் , ” ஊர் கோடியில் இருக்குது! “… என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள்.
உடனே , ” ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் .
குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.
அப்போது வாரியார் சிரித்துக் கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…! மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர் அவர் வயிரே சுடுகாடு “ என்று கூறி வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.
கொடுத்தால் தான் கிடைக்கும்
கிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம்.
ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.
இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென வந்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்தார் அந்த அன்பர்.
அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், ”எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்” என்றாராம்!