ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்! பகுதி: 3
- கவிஞர் மீ.விசுவநாதன்
ஜகத்குரு அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் தனக்குக் குருநாதரான அனந்தஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளைப் போற்றி அஷ்டோத்திரம் எழுதினர். இன்றும் அஷ்டோத்திர பாத பூஜைக்கு அந்த நாமாவளிகளைத்தான் சொல்லி நாம் பூஜை செய்து வருகின்றோம். அந்த நூற்றி எட்டு நாமாக்களின் பெருமைகளை, ஆழ்ந்த பொருள் கொண்ட பதங்களை பண்டிதர்கள் போற்றிக் கொண்டாடுவதை இன்றும் பக்தர்கள் அறிவார்கள். அந்த நாமாக்களில் ஒன்பதாவது நாமம்: ” அஹந்தா-மமதா-ஹீன:” என்பதாகும். அதன் பொருள் “நான்” எனும் அஹந்தையும், எனது என்ற மமதையும் அற்றவர் என்பதாகும்.
பல வருடங்களுக்கு முன்பு ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் தமது விஜய யாத்திரையின் ஒர் அங்கமாக மேல்மஙகலம் கிராமத்திற்கு விஜயம் செய்தார்கள். அங்கு அவர் அருளிய உபன்யாசத்தில் தமது குருநாதரான ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் அவர்கள் எங்கனம் ஒரு சிறிதும் அஹங்காரமோ மமகாரமோ அற்றவராகத் திகழ்ந்தார் என்பதற்குத் தாமே கண்கூடாகக் கண்ட இரு சம்பவங்களை குருபக்தி மேலிடக் குறிப்பிட்டார்கள்.
“எனது குருநாதர் ஒரு சமயம் என்னிடம் கூறினார்,” சுவாமிகளே..நாம் எந்த ஸ்தாபனத்தைச் சார்ந்திருகின்றோமோ அந்த ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் பாடுபட வேண்டுமே தவிர, அதனால் நமக்கு மற்றவர்களிடமிருந்து மதிப்பும் மரியாதைகளும் கிடைக்கின்றனவா என்பதைப் பார்க்கக் கூடாது. அப்படியே கிடைத்தாலும், நாம் அவற்றை நமக்குக் கிடைத்ததாக எடுத்துக் கொள்ளாமல் நமது ஸ்தாபனத்திற்குக் கிடைத்தவையாகத்தான் கருதிட வேண்டும்.
நாம் இங்கே (ஸ்ரீ சாரதா பீடத்திற்கு) வந்திருப்பது ஸ்ரீ சாரதா பாமேஸ்வரிக்கு நம்மால் எவ்வளவு சேவை ஆகியிருக்கிறது என்றுதான் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, நமக்கு எவ்வளவு ஸ்வாகத பத்திரிகைகள் (வரவேற்பு மடல்கள்) கிடைத்துள்ளன என்று கேட்டுக் கொள்ளக் கூடாது.” எனது குருநாதர் என்றுமே “வ்யக்தி கௌரவ”த்திற்கு (தனிநபர் பெருமைக்கு) இடம் கொடுத்ததில்லை.
“சில வருடங்களுக்கு முன்னால் ஆசார்யாளின் கட்டளைக்கிணங்க நான் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விஜய யாத்திரை செய்தேன். இம்மாநிலத்தில் எந்த ஓர் இடத்திலும் சிருங்கேரி மடத்தினால் நடத்தப்படும் சாஸ்திர பாட சாலை ஒன்று கூட இல்லையே எனும் வருத்தம் எனக்கு இருந்து வந்தது. ஆகையால் இந்த விஜய யாத்திரையின் பொது ஹைதராபாத் நகரில் தர்க்கம் மற்றும் வேதாந்தம் ஆகிய சாஸ்திரங்களைக் கற்பிக்கும் பாடசாலை ஒன்றினைத் துவக்கி வைத்தேன்.
அதற்கு “ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சாஸ்திர ஸம்வர்த்தினி பாடசாலை” என்றும் பெயர் வைத்தேன். விஜய யாத்திரை முடிந்து சிருங்கேரிக்குத் திரும்பியதும் ஆசார்யாளிடம் அந்த சாஸ்திர பாடசாலை பற்றியும், அதற்க்கு அசார்யாளின் பெயரை வைத்திருப்பது பற்றியும் குறிப்பிட்டேன். உடனே ஆசார்யாள், ” அந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கிறது சுவாமிகளே? என்று கேட்டார்.
நானும் ,” அங்கு வருபவர்களுக்கு அசார்யாளின் ஸ்மரணை (நினைவு) உண்டாகிட வேண்டும் என்பதற்காக வைத்தேன்” என்று கூறினேன். அசார்யாளோ, “பாடசாலைக்கு அப்பெயரை வைக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித தாத்பர்யமும் இல்லை சுவாமிகளே” என்று கூறி விட்டார்.
முதல் சம்பவத்தின் மூலம் எப்படித் தமது குருநாதருக்கு அஹங்காரமே (தான் எனும் எண்ணமே) இல்லாதிருந்தது என்பதையும், இரண்டாவது சம்பவத்தின் மூலம் தமது குருநாதருக்கு எப்படித் தம்முடைய பெயரில் கூட என்னுடையது எனும் உணர்வு இல்லாதிருந்தது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்.
” தாம் ஒரு பிரசித்தி பெற்ற பீடத்தின் அதிபதி; தமக்குச் சேவை செய்திட ஆயிரக்கணக்கில் ஜனங்கள் இருக்கிறார்கள் என்ற மாதிரியான அஹந்தை, மமதைக்கெல்லாம் அசார்யாள் ஒருபோதும் இடங்கொடுத்தது இல்லை. மிகச் சாதாரணமான மனிதராகவே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். ஒருமுறை தர்மாத்மா ஸ்ரீ வைத்ய சுப்ரமணிய ஐயர் அவர்களின் புதல்வர் ஸ்ரீ வி.வி. ஜெயராமன் பின்வரும் சம்பவத்தினைக் குறிப்பிட்டார்:
“1977ஆம் வருடம் ஆசார்யாளின் ஷஷ்டியப்த்த பூர்த்தி விழா சென்னையில் நடைபெற்றது. அச்சமயம் சென்னைக்கு விஜயம் செய்திருந்த ஆசார்யாள் எங்கள் இல்லத்தின் மாடியில் தங்கி இருந்தார்கள். ஒருநாள் இரவு சுமார் பதினோரு மணி அளவில், மாடியில் பல இடங்களில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைப்பதற்காக நான் மாடிக்குச் சென்றேன். அங்கே தனது இடுப்பில் வெறும் துண்டு மாத்திரம் கட்டிக் கொண்டு யாரோ ஒருவர் ஏற்கெனவே அங்கு விளக்குகளை அணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
அவரது அருகில் சென்ற போது, அவர் ஆசார்யாள் என்று அறிந்து விக்கித்துப் போன நான், “இதைப் போய் ஆசார்யாள் செய்வதா” என்று பதறியவாறு, “நான் அணைத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினேன். ஆசார்யாளோ,” இதில் என்னப்பா சிரமம் இருக்கிறது? பரவாயில்லை. நானே செய்து விடுகிறேன். எதற்காக இத்தனை விளக்குகள் தேவையே இல்லாமல் எரிந்து, வீணாக மின்சாரமும், பணமும் செலவாக வேண்டும்? அதனால் இவற்றை எல்லாம் அணைத்து விடலாமே என்று இங்கு வந்தேன்” என்று கூறியவாறே, வெளிப்புறத்தில் உள்ள வராண்டாவிற்குச் சென்று, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்குகளையும் அணைக்கத் துவங்கினார்.”
(ஸ்ரீமான் கி. சுரேஷ் சந்தர் தொகுத்த “அருள்மிகு குருவின் பொருள்மிகு நாமங்கள்” என்ற புத்தகத்தில் இருந்து எடுத்துப் பகிரப்பட்டது)
1981ஆம் வருடம் நவம்பர் மாதம் எங்களின் கல்யாணபுரி என்ற கல்லிடைக்குறிச்சி கிராமத்திற்கு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளும், ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளும் விஜயம் செய்தருளினார்கள். அந்த நேரத்தில் அவர்களது அருளாணைப்படி “அதிருத்ர மகாயக்யம்” நடத்தப் பட்டது. பல ஊர்களில் இருந்தும் ஆசார்யாளை தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அத்துணை பேருக்கும் அந்தப் பதினோரு நாள்களும் அன்னக்கொடி கட்டி அன்னதானம் செய்தார்கள் கிராமத்து மகாஜனங்கள். அன்னக்கொடி கட்டினால், எத்துணை பேர்கள் வந்தாலும் வயிறாரச் சாப்பாடு போடவேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை கிராமத்துப் பெரியோர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள். இராமச்சந்திரபுரம் தெருவில் மிகப்பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். எழாபுரம் என்ற தெருவில் கன்னடியன் கால்வாய்க்கு மிக அருகில் உள்ள பெரிய வீட்டில் சமையல் வேலைகள் நடந்தன. ஒவ்வொரு நாளும் அந்த வீட்டின் பெரிய கூடத்தில் “அன்னத்தை வடித்து” மலைபோலக் குவித்து வெள்ளைத் துணியால் மூடி வைத்திருப்பார்கள். இவ்வளவு அன்னத்திற்குத் தேவையான காய்கறிகள், பால்வகைகள், பலசரக்கு சாமான்கள் எல்லாம் மலைபோலக் குவித்து வைத்திருந்தனர். ஆசார்யாளுக்கு இவைகளைப் பார்வையிட வேண்டும் என்று தோன்றியது.
ஒருநாள் சமையல் செய்யும் இடத்திற்கே இரண்டு குருநாதர்களும் வந்தார்கள். பெரிய பெரிய வார்ப்புகளில் பாயாசமும், சாம்பார், ரசம், கறிவகைகள் என்று சமையல் செய்து வைத்திருந்தார்கள். அதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி கொண்ட ஆசார்யாள், தலைமைச் சமையல்காரர் திரு. நாராயணன் என்ற “நாணா” மாமாவிடம்,” இவ்வளவு சாதம் இருக்கிறதே…
இதற்கு இந்த ஒரு வார்ப்பில் உள்ள சாம்பார் போதுமா? என்று கேட்க,” ஒரு பெரிய பாத்திரத்தில் சாம்பாருக்குத் தேவையான அனைத்தும்(concentrate) கரைத்துத் தயாராக வைத்திருப்பதையும், தேவைப்படும் போது அதை எடுத்து வெந்நீரில் கலந்து கொண்டால் சாம்பார் தயார்” என்று சொல்ல, ” ஓ…அப்படியா…” என்று நாணாமாமாவைப் பாராட்டினார்.
விஜய யாத்திரை முடிந்து புறப்படும் முன்பு குருசேவை செய்த தன்னார்வத் தொண்டர்களுக்கும், இதற்காக உழைத்த அத்தனை தொழிலாளர்களுக்கும் ஸ்ரீ சாரதாம்பாள் உருவம் பதித்த வெள்ளி டாலரும், மந்திராக்ஷதையும் தந்து ஆசீர்வதித்தார் ஸ்ரீ ஆசார்யாள். தலைமைச் சமையல்காரர் திரு. நாணா மாமாவை மிகவும் பாராட்டி அவரரிடம் பேசி மகிழ்வித்த கருணையை அவரது மருமகனும், எனக்கு நண்பனுமான திரு.கணபதி சுப்பிரமணியன் என்ற “ஜெமினி” பலமுறை சொல்லி குருநாதர்களின் எளிமையையும், எளியோர்க்கு இரங்கும் குணத்தையும் வியந்து கூறியது எப்போதும் என்செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வித்தையும் விநயமும் தொடரும் – 17.05.2020