கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுப்பதுடன், பக்தர்கள் முககவசம் அணிந்து வருவது கட்டாயமாகும். பக்தர்களுக்கு கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவேண்டும். உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.
கோவில்களில் 1,075 சதுர அடி பரப்பளவில் 20 பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு ஆதார் எண், அடையாள அட்டை போன்றவற்றின் அடிப்படையில் செயலிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தரிசனத்திற்கு டோக்கன் வழங்கலாம்.
கோவிலுக்குள் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும், கர்ப்பிணிகளையும் வீடுகளில் இருந்தே வழிபட கோவில் நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வர அனுமதிக்கவேண்டாம். பூஜைகளிலும், அபிஷேக நேரங்களிலும் பக்தர்களும், உபயதாரர்களும் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய கூடாது. கோவில்களின் உட்புறம் பக்தர்கள் அங்கப்பிரட்சனம் செய்ய ஊக்குவிக்க வேண்டாம்.
தங்கும் விடுதிகள் மற்றும் அறைகள் ஒதுக்கப்படக்கூடாது. இயல்புநிலை திரும்பும் வரை திருவிழாக்கள், பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். கடைகளில் பிரசாதம் விற்பனை செய்யலாம். கோவில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி இன்று காலை முதலே கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வெப்பநிலை கணக்கிடுதல், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகுதான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே அறிவுறுத்திய படி பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கோவிலில் அர்ச்சனை பூஜைகள் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தரிசனம் முடித்த பின்பாக கோவிலில் அமர்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக லட்டு பிரசாதம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மட்டும் ஆன்லைனில் ஒளிபரப்பானது. ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, திருவிளையாடல் என அனைத்தையும் தரிசிக்க முடியாமல் கவலையில் இருந்தனர். இன்றைய தினம் மீனாட்சியை தரிசனம் செய்தது பக்தர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
காலை முதலே குவிந்த பக்தர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணற வேண்டியதாகி விட்டது. பக்தர்களின் இன்றைய எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் குறிப்பிட்ட அளவு பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் காத்திருந்தாலும் மீனாட்சி அம்மனை ஐந்து மாதம் கழித்து தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக பக்தர்கள் கூறியுள்ளனர். ஏற்பாடுகள் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சீக்கிரம் அனுமதி கொடுத்தால் நிறைய பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும்.
மதுரை மீனாட்சியை 5 மாதத்திற்குப் பிறகு பார்த்தது ரொம்ப சந்தோஷம். பொறுமையா தள்ளுமுள்ளு எதுவும் இல்லாமல் தரிசனம் செய்தோம். காலையிலேயே சீக்கிரம் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.