ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 12 – கனைத்திளங் கற்றெருமை
விளக்கவுரை: வேதா. டி. ஸ்ரீதரன்
கனைத்(து) இளங் கற்றெருமை கன்றுக்(கு) இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்(து) இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்(கு) இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோ(ர்) எம்பாவாய். (12)
பொருள்
கன்றுகளின் பசியைப் பற்றிய கவலையினால் எருமை தனது மடியில் இருந்து பாலைச் சொரிந்தபடியே அங்குமிங்கும் செல்கிறது. அவ்வாறு இடைவிடாமல் சொரிந்த பாலினால் வீட்டு வாசல் ஈரமாகிறது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் சேறாகக் காட்சியளிக்கிறது. இத்தகைய எருமைகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கும் இடையனின் தங்கையே! மார்கழி மாதத்துப் பனி எங்கள் தலையில் கொட்டுகிறது. அதைப் பொருட்படுத்தாமல் உன் வீட்டு வாசலில் நாங்கள் நிற்கிறோம். பெரும் கோபத்தினால் ராவணனை அழித்தவன், நம் எல்லோர் மனத்துக்கும் இனியவன், அந்த நாராயணனின் பெருமைகளைப் பாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நீயோ வாயே திறக்காமல் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே! எல்லோரும் உன்னை வேடிக்கை பார்க்கிறார்கள். சீக்கிரம் எழுந்திரு.
அருஞ்சொற்பொருள்
நினைத்து – (தன் அருகே இல்லாத கன்றைப் பரிவுடன்) நினைத்து
சோர – சொரிய
தங்காய் – தங்கையே
பனித்தலை வீழ – தலைமீது பனி கொட்டும் நிலையில்
வாசற்கடை பற்றி – வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு
கோமான் – அரசன்
செற்ற – வென்ற
இனித்தான் – இனியாவது
கனைத்து ….. பால் சோர – தனது கன்றின் பசியை நினைத்து வருந்திய எருமை கனைத்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியது; கன்றுக்காகக் காம்புகளின் வழியே பாலைச் சொரிந்தது.
மனத்துக்கு இனியான் –
ராம என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையாக ‘இனியன்’ என்ற தமிழ்ச் சொல்லைக் கம்பர் பயன்படுத்தியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்க விஷயம்.
மொழி அழகு
தரையில் பால் சொரிந்த வெள்ளம், தலையில் பனி வெள்ளம் இரண்டையும் வெளிப்படையாகச் சொல்லி, மனத்துக்கினியான் என்ற நாமாவின் மூலம் உள்ளத்தில் பெருகும் பக்தி வெள்ளத்தைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.
ஆன்மிகம், தத்துவம்
கன்றுக்கு இரங்கும் எருமையைப் போன்றதுதான் பகவானின் கருணையும். ஜீவர்களுக்காக ஏங்கும் அவன் கருணையும் வற்றாது பொழிகிறது. அதன் பொழிவுக்குக் காரணம் ஏதுமில்லை. இதுவே அ-வ்யாஜ கருணா (காரணம் ஏதும் இல்லாத கருணை) எனப்படுகிறது.
***
பகவானை அக்காரக் கனி (சர்க்கரைக் கனி) என்பார்கள். அவன் அவ்வளவு இனிமையானவனாம். இனிப்புப் பண்டம் ஓரளவுக்கு மேல் சாப்பிட முடியாது, திகட்டி விடும். ஆனால், இந்த இனிப்போ சுவைக்கச் சுவைக்க மேன்மேலும் தித்திக்கும். எனவே, அவன் மனத்துக்கினியான்.