தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 என்ற வகையில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து இன்று டி20 போட்டித் தொடர் தொடங்கியது.
இன்று நடைபெற்ற டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன் எடுத்து அசத்த, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 161 ரன் எடுத்தது.
இதை அடுத்து 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது.
சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் முதல் முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன், 4 ஓவரில் 30 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் எடுத்து அசத்தினார். ஜடேஜாவுக்கு மாற்று வீரராகக் களம் இறங்கிய யஸ்வேந்திர சாஹலும் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதை அடுத்து 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.