உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி – முதல் அரையிறுதி ஆட்டம் – அர்ஜெண்டைனா vs குரேஷியா
<- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ->
‘மெஸ்ஸி’ மற்றும் ‘அல்வாரெஸ்’ ஆகியோர் தங்களின் கோல்கள் மூலம் அர்ஜென்டினாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். புதன்கிழமையன்று நடந்த FIFA உலகக் கோப்பை 2022இன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரேஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அர்ஜென்டினா ஆறாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
2018ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய குரோஷியா அணியை தொடக்கத்திலிருந்தே அர்ஜெண்டைனா அணி கோல் அடிக்க விடவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 2-0 என முன்னேறிய பிறகு, அர்ஜென்டினா மீண்டும் குரேஷியாவுக்கு திரும்ப எந்த வாய்ப்பையும் அனுமதிக்கவில்லை.
34ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு பெனால்டியை கோலாக மாற்றினார். இது இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் ஐந்தாவது கோலாகும். அவர் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 11 கோல்கள் அடித்துள்ளார்.
அர்ஜெண்டைனா அணியின் ‘அல்வாரெஸ்’ ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு 39ஆவது நிமிடத்தில் ஒரு தனி கோல் அடித்து முன்னிலையை இரட்டிப்பாக்கினார். 69ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு வாய்ப்பை உருவாக்க, அல்வாரெஸ் அதனை கோலாக மாற்றி, அர்ஜென்டினாவை 3-0 என முன்னேற வைத்தபோது குரோஷியா அணியின் உலகக் கோப்பையைக் கைப்பற்றும் கனவு முடிந்தது.
அர்ஜென்டினா இப்போது பிரான்ஸ் மற்றும் மொராக்கோ இடையேயான இரண்டாவது அரையிறுதியின் வெற்றியாளருடன், ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து அனைத்துக் கண்களும் கேப்டன் மெஸ்ஸி மீது இருந்தபோது, அல்வாரெஸ் ஒரு கோல் அடிப்பதற்காக பந்தை கோலருகே கொண்டு சென்றார். அப்போது அவர் குரேஷியா அணியின் கோல்கீப்பர் ‘டொமினிக் லிவாகோவிச்’ அல்வாரஸைத் தடுத்தார். தான் பந்தைத் தான் தடுக்க முயற்சி செய்ததாக லிகோவிச் கூறியபோது நடுவர் அவருக்குத் தண்டனையாக “மஞ்சள் அட்டை” அளித்தார். அதனால் ஒரு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த பெனால்டியை மெஸ்ஸி கோலாக்கினார்.
ஒருவேளை உலகக் கோப்பையை அர்ஜெண்டைனா அணி வென்றால் மெஸ்ஸி அர்ஜென்டினாவில் மறைந்த “டியாகோ மரடோனா” அனுபவிக்கும் தெய்வ நிலைக்கு உயர்வார். அவர் பிரான்சு நாட்டில் வழங்கப்படும் Ballon D’Or என்ற “தங்கப்பந்து” விருதினை ஏழு முறை வென்றவர்.
ஞாயிற்றுக்கிழமை அவர்கள் நடப்பு சாம்பியனான பிரான்ஸை எதிர்கொள்வார்கள் அல்லது உலகக் கோப்பை அரையிறுதியில் முதல் அரபு நாடான மொராக்கோவை எதிர்கொள்வார்கள்.