துபை: ஐசிசி., விருதுப் பட்டியலில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், சிறந்த ஒருநாள் வீரர் என ஒரே ஆண்டில் மூன்று விருதுகளையும் தட்டிச் சென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி., சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு விருதுப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு பங்கேற்ற 13 டெஸ்டில் 5 சதம் உட்பட 1,322 ரன்கள் (சராசரி 55.08), 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதம் உட்பட 1,202 ரன்கள் (சராசரி 133.55) எடுத்துள்ளார் கோலி. பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆண்டு இறுதியில் டெஸ்ட் மறும் ஒருநாள் அரங்கில் முதலிடத்தில் இருந்தார்.
இவரது தலைமையிலான இந்திய அணி டெஸ்டில் முதலிடத்தையும் ஒருநாள் அரங்கில் இரண்டாமிடத்தையும் பிடித்தது. இதையடுத்து கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘கேரி சோபர்ஸ்’ கோப்பையை கோலி தட்டிச் சென்றார்.
ஐ.சி.சி., சார்பிலான கனவு ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டார். ஒருநாள் அணியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரும், டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரும் இடம் பிடித்தனர். சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச் சென்றார்.
கனவு அணி விவரம்:
டெஸ்ட் : கோஹ்லி (கேப்டன்), டாம் லதாம் (நியூசி.,), கருணாரத்னே (இலங்கை), வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் (நியூசி.), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர், இந்தியா), ஜேசன் ஹோல்டர் (விண்டீஸ்), ரபாடா (தெ.ஆப்.,), லியான் (ஆஸி.,), பும்ரா (இந்தியா), முகமது அபாஸ் (பாக்.,).
ஒருநாள் அணி: கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (இந்தியா), பேர்ஸ்டோவ், ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசி.,), ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), முஸ்தபிஜூர் ரஹ்மான் (வங்கதேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ், பும்ரா (இந்தியா).