தமிழகத்தில் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதில், தொடர்புடையதாகச் சொல்லப்படும் செய்யதலி நவாஸ் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நாகர்கோவிலை அடுத்த இளங்கடை பகுதியில் செய்யதலி நவாஸ் பதுங்கியிருப்பதாகவும் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் அப்துல் சமீம் பதுங்கியிருப்பதாகவும் தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு ரகசியத் தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து, நாகர்கோவில் இளங்கடை பகுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவான எஸ்.ஐ.யூ (சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு) டி.எஸ்.பி சுப்பையா தலைமையில் அதிரடி சோதனை நடந்தது.
அதில் செய்யதலி நவாஸ் மற்றும் அவருக்கு உதவி செய்த தவ்ஃபீக் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லை. தவ்ஃபீக்கின் வீட்டில் அவரின் மனைவி இருந்துள்ளார். அவரிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் திருவிதாங்கோடு பகுதியில் அப்துல் சமீம் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. ஆனால், இவர்கள் மூன்று பேரும் காவல்துறையிடம் சிக்கவில்லை.
இந்தச் சோதனையில் நெல்லையைச் சேர்ந்த சிறப்பு உளவுப்பிரிவு காவலர்களும் ஈடுபட்டனர்.
சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிபி.ஜே.பி மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்னியாகுமரி விவேகானந்தாபாறையில் நடக்கும் நூற்றாண்டு விழா வரும் 25-ம் தேதி நடக்கிறது.
அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அதை முன்னிட்டு தீவிரவாத தடுப்பு பிரிவான எஸ்.ஐ.யு. டி.எஸ்.பி தலைமையில் பழைய குற்றவாளிகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அதில் பி.ஜே.பி. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது” என்றார்.