சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தேசிய குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினமான இன்று கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒருவரும் வராததால் கல்லூரி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பின்னர் 10.30 மணிக்கு மேல் ஒரு பேராசிரியர் மற்றும் இரண்டு பணியாளர்கள் வந்து தேசியக் கொடியை ஏற்றிச் சென்றனர்.
மாணவர்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படாததால் மாணவர்கள் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடியரசு தினத்தை கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் புறக்கணித்தது சாத்தூர் பகுதியில் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது.