வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பதிவானது. இந்த பருவமழை காலத்தில் சராசரி அளவை காட்டிலும் 2 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் குளிர் கூடுதலாக பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். அவர்கள்,
வெயில் தலையை காட்டிய பிறகே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்த நிலையில் வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை இந்த குளிர், பனி தொடரும் என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நேற்று அதிகபட்சமாக மதுரை தெற்கில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை பதிவாகாத நிலையில், அடுத்த சில நாட்களுக்கு இது போன்ற வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். இதே நிலை ஜனவரி 29ம் தேதி வரை தொடரும். சென்னை, சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 88 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் பிப்.15ம் தேதி வரை குளிர் கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.