பெண் போலீஸ் பற்றி முகநூலில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட போலீஸை இடைநீக்கம் செய்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
கோபி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சுப்பிரமணியம். இவர் ஈரோடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸ் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு முகநூலில் அவதூறாகப் பதிவிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் போலீஸ் எச்சரித்தும், ஏட்டு சுப்பிரமணியம் பதிவுகளை நீக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஈரோடு மகளிர் ஆய்வாளர் நாகலட்சுமிக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸும், சுப்பிரமணியனும் ஆயுதப்படையில் ஒன்றாகப் பணியாற்றி வந்த போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பெண் போலீஸை பழிவாங்கும் வகையில் ஏட்டு சுப்பிரமணியன் தனது முகநூல் பக்கத்தில் அவதூறுகளை பரப்பி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சுப்பிரமணியத்தை இடைநீக்கம் செய்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யவும் ஈரோடு நகர போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.