நாமக்கல் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் தூசூரை சேர்ந்த பிரியா என்ற இளம்பெண், ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் சேலம் அம்மாபேட்டையில் வசிப்பதால் அவரை பார்க்க அடிக்கடி சென்றுள்ளார்.
அப்போது, அங்குள்ள ஆட்டோ ஓட்டுனரான பூவராகவன் பிரியாவை சந்தித்து காதல் கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் இதற்கு பிரியா தொடர்ந்து மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பூவராகவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாவை கடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஜவுளி கடையை நோக்கி நடந்துசென்ற பிரியாவை பின் நோக்கி வந்த மூவர், வழுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்ற முற்பட்டனர்.
இதனை கண்ட அங்கிருந்த மக்கள் மூவரையும் பிடிக்க முயன்றபோது பூவராகவனும், செந்திலும் அங்கிருந்து தப்பியோடினர். எனினும், வசமாக சிக்கிக்கொண்ட அவரது நண்பரை, மக்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.