சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்தார்.
கடலூர் மாவட்டம் மருதூர் அருகே உள்ள தலைக்குளம் உளுத்தூர் கிராமம் மன்மதன்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் லட்சுமிநாராயணன் (32). இவருக்கு திருமணமாகவில்லை. ஈரோட்டில் வேலைசெய்து வந்த இவர் கடந்த மாதம் இறுதியில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நுரையீரல் பாதிப்புடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப். 1-ம் தேதி அதிதீவிர கரோனா சிகிச்சை வார்டு 9-ல் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கடந்த ஏப். 2-ம் தேதி இவருக்கு ரத்தமாதிரி எடுக்கப்பட்டு கரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை.
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சுமிநாராயணன், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்தார். கரோனா வைரஸ் தாகுத்தலால் இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இவருக்கு ஏற்கெனவே கடந்த 4 மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.
ரத்த பரிதோதனை முடிவு வந்த பின்னர்தான் இறப்புக்குக் காரணம் என்னவெனத் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.