காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆறுமுகம். கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியினருக்கு குறிசொல்பவராக இருந்துவந்துள்ளார். மனைவி கோவிந்தம்மாள், தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு ராஜேஸ்வரி, ஷாலினி, சேதுராமன் என மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
வீட்டுக்குப் பின்புறமாக சிறிய கோயில் ஒன்றைக் கட்டி, அங்கே குறி சொல்லிவந்திருக்கிறார் ஆறுமுகம். வீட்டுக்கு செலவு செய்யாமல் அந்தக் கோயிலுக்கே அதிகமாக செலவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
சண்டை ஏற்பட்டால் கோவிந்தம்மாள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவார். இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்தநிலையில், நேற்று காலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கோவிந்தம்மாள் வேலைக்குச் சென்றுவிட்டார். தன்னுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கோவிந்தம்மாள் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாரோ என ஆறுமுகத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ‘கோவிந்தம்மாள் எங்கே?’ எனக் குழந்தைகளிடம் கேட்டுள்ளார். குழந்தைகளும் தங்களுக்குத் தெரியாது எனக் கூறி இருக்கிறார்கள். இதையடுத்து, மன அழுத்தத்திலிருந்த அவர் தன்னுடைய சகோதரர் ஒருவருக்கு போன் செய்து, “நான் எத்தனை முறைதான் அவளை மாமியார் வீட்டுக்குச் சென்று அழைத்து வருவது.. எனக்கு வாழப் பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்” என விரக்தியாகச் சொல்லியிருக்கிறார்.
வேலைக்குச் சென்ற கோவிந்தமாள் வீடு திரும்பியபோது, மூத்த மகள் ராஜேஸ்வரி இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் அருகில் உள்ளவர்களிடம் விவரத்தைச் சொல்லி கதறி அழுதுள்ளார். அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டின் பக்கத்தில் இருக்கும் விவசாயக் கிணற்று ஓரத்தில் உள்ள மரத்தில் ஆறுமுகத்தின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்டுப் படையினருடன் அந்தக் கிணற்றில் தேடத் தொடங்கினர். அப்போது, ஷாலினி மற்றும் சேதுராமனை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். அவர்கள் இருவரையும் கல்லைக் கட்டி கிணற்றில் தள்ளி இருப்பது தெரியவந்துள்ளது. `தற்கொலை செய்துகொண்ட ஆறுமுகம், யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தன்னுடைய கவலைகளை அடக்கி வைத்திருப்பதால் மன அழுத்தத்துடனே இருப்பார். இதனால் ஏற்பட்ட விரக்திதான் நான்கு உயிர்கள் பலியாகக் காரணம்’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.