கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை. மத்திய அரசு மத வழிபாட்டுக்குரிய திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழிபாட்டு தலங்களை திறக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரிய கோயில்களில் ஜூன் 1 முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்து முன்பதிவு தொடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜூன் 1-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.