கொரோனா ஊரடங்கில், இ-பாஸ் சேவையில் மருத்துவத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தொழில்கள், கடைகளுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க தளர்வு வழங்கப்படுகிறது.
அதே போல், சொந்த மாவட்டத்திற்குள் செல்ல, எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை. ஆனால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும்.
இதில், மருத்துவ அவசரம், இறப்பு, திருமணம், மற்ற இடங்களில் இருந்து அழைத்து வர என, நான்கு பேருக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும். இதில் மருத்துவத்திற்கு நாம் செல்லும் மருத்துவமனை கடிதம், கன்சல்டிங் செய்ய வேண்டிய நோயாளியின் நோய் தண்மை குறித்த அறிக்கையை சமர்ப்பித்தால், இரண்டு மணி நேரத்தில் இ-பாஸ் கிடைத்து விடுகிறது.
இதை நோயாளிகள் பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இதனால், விண்ணப்பித்தவுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இறப்புக்கு செல்ல வேண்டும் என்றால், இறந்தவரின் இறப்பு சான்று, இறந்தவர்களுக்கு மருத்துவர் அளித்த சான்று, கிராம நிர்வாக அலுவலரின் சான்று இதில், ஏதாவது ஒன்றை அளித்தாலும் உடனடியாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது.
ஆனால், கொரோனா காலமான இந்த சமயத்தில், உறவினர்கள் மேற்குறிப்பிட்ட சான்றிதழை பெறுவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
திருமணத்திற்கான அனுமதியும், முகூர்த்த தேதிக்கு முன் தேதியில் இருந்து மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் திருமணம் ஏற்பாடு செய்பவர்கள் உடை, தாலி உள்ளிட்டவைகளை வாங்க இந்த அனுமதி கிடைப்பதில்லை.
அதேபோல், விண்ணப்பிப்பவர்கள் திருமண தம்பதிகளின் பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளாக இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. இதனால், இந்த விண்ணப்பங்களில், 50 சதவீதம் நிராகரிக்கப்படுகிறது.