அரியலூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஜெயங்கொண்டம் ராஜாக்கொல்லை தெருவைச் சேர்ந்த பரணிதரனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவர்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நீடித்து வந்தது தொடர்பாக, ஜெயந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இருவரையும் அழைத்து சமதானம் செய்து போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், மர்மமான முறையில் ஜெயந்தி நேற்று உயிரிழந்து கிடந்துள்ளார். தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, ஜெயந்தியின் தாய் கஸ்தூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து தப்பியோடிய ஜெயந்தியின் கணவர் பரணிதரன், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து ஜெயந்தியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயந்தியின் இறப்பு கொலையா, தற்கொலையா என்பது குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.