கரூரில் மின்வாரிய கணக்கீட்டின் அலட்சியத்தால் சிறிய வீட்டுக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கரூர் அருகே வீட்டு மின் இணைப்பிற்கு 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்ததை கண்டு கூலி தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
மின்வாரிய அலட்சியத்தால் இதயம் ஒரு நொடி நின்று விட்டதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மின்கட்டணம் குறித்து மின்வாரிய கணக்கீட்டாளர்கள் சரிவர பதிலளிக்க மாட்டார்கள் என்றும், அலுவலகங்களில் தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றும் புகார் எழுந்துள்ளது.
செல்லாண்டிபாளையம் தட்டான்காடு பகவதி நகரில் வசித்து வரும் வீரப்பன் என்பவருக்கு தான் இந்த மின்கட்டணம் வந்துள்ளது. வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.
இதில் ஒரு வீட்டிற்கு 100 யூனிட்டிற்குள் வருவதால் இவர் மின்கட்டணம் செலுத்தியதே இல்லையாம். மற்றொரு வீட்டிற்கு சொற்ப அளவிலேயே வீரப்பன் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளாராம்.
ஆனால் இந்த மாதம் அவரது வாழ்வில் பூகம்பத்தை இறக்கி விட்டதாம் மின்வாரியம். இதற்கு பதிலளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், சில சர்வீஸ்களின் எண்களை கணினியில் ஏற்றும் போது புள்ளி வைக்காமல் ஏற்றியிருந்தால் இதுபோன்ற தவறுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தங்களின் குளறுபடியை மறைப்பதற்கு சரியான தகவல்களை தெரிவிக்க மின்துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.