தூத்துக்குடி அருகே பிரபல தேவாலயத்தின் உச்சியின் மேல் நின்று ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை அடுத்த தூய யோவான் தேவாலயத்தின் கோபுரத்தின் உச்சியில் நின்று ஊழியராக வேலை பார்த்து வந்த அகஸ்டின் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த பாதிரியார்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அகஸ்டின் கூறியதாவது, இந்த தேவாலயத்தில் 18 ஆண்டுகளாக ஊழிய பணி செய்து வருகிறேன்.
தன்னை சில வாரங்களுக்கு முன்பாக தேவாலயத்தின் நிர்வாகிகள் பணியிடை நீக்கம் செய்தனர். தனக்கு மீண்டும் அந்த பணியை வழங்கினால் மட்டுமே தற்கொலை எண்ணத்தை கை விடுவேன் என மிரட்டல் விடுத்து வருகிறார்.
இவர் தனியாக கோபுரத்தின் உச்சியில் மேல் ஏறி நிற்காமல் தனது மனைவி மகன் என தனது குடும்பத்தையே சாவின் விளிம்பில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
அவரது மகன் கண்ணீர் மல்க அழுகும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், காவல்துறையினரும், பாதிரியார்களும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவரது தற்கொலை எண்ணத்தை கை விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.