வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த தேவி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சுதாகர் சமீப காலமாக தேவியிடம் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். தேவியுடம் அவரிடம் பேச பல முறை முயன்றும் அவர் தவிர்த்ததால், தன்னை ஏமாற்றுவதை அறிந்துகொண்டார்.
பின்னர் ஒரு முறை பேச வாய்ப்பு கிடைத்தப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுதாகரிடம் தேவி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் அவரை தரக்குறைவாக பேசியும், மிரட்டியும் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது என கூறி தேவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்து மிரட்டி வரும் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நேற்றுமுன்தினம் வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீசார் தேவி மற்றும் சுதாகரை ஆகிய இருவரையும் அழைத்து 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
மேலும் தொடர்ந்து விசாரணை நடத்த இவருவரையும் நேற்று விசாரணைக்கு போலீசார் அழைத்திருந்தனர். தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் காலை முதல் காவல் நிலையத்தில் காத்திருந்த நிலையில், சுதாகர் விசாரணைக்கு வரவில்லை.
இதனால் சுதாகரை உடனடியாக அழைத்து வரும்படி போலீசாரிடம் தேவி மற்றும் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.