வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருச்சி எஸ்பி அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூா் எழில் நகரைச் சோந்த முத்துச்செல்வியும், கண்ணன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சீா்வரிசையாக 15 பவுன் நகை, இருசக்கர வாகனம் கொடுத்தனர்.
ஆனால், திருமணம் ஆன சில மாதங்களில் கண்ணன் குடும்பத்தினா் மேலும் வரதட்சணை கேட்டு முத்துசெல்வியைக் கொடுமைப்படுத்தினா். இதுகுறித்து திருவெறும்பூா் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அவர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதற்கு பிறகு கண்ணன் குடும்பத்தினா் முத்துசெல்வியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த முத்துசெல்வி மண்ணெண்ணெய்யை ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து வந்த தனிப்பிரிவு போலீஸார் முத்துசெல்வி புகார் மீது நடவடிக்கை எடுக்க திருவெறும்பூா் போலீஸாருக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்தனர்.