மின்சார வாகனங்களைப் பழுது நீக்கி பயிற்சி பெற வசதியாக தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-
பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா், விருதுநகா் மாவட்டம் சாத்தூா் ஆகிய இடங்களில் ஐ.டி.ஐ.-க்கு புதிய கட்டடங்கள், பயிற்சியாளா்கள் விடுதிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளன. மேலும், திருப்பூா் தாராபுரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஆகிய இடங்களில் ஐ.டி.ஐ.,-க்கு புதிய பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள், புதிய தொழில்பிரிவுக்கு வகுப்பறை கட்டடங்கள் ஆகியன கட்டப்பட்டன. அவற்றை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையும் முதல்வா் பழனிசாமி திறந்தாா்.
மின்சார வாகனங்கள்: தமிழகத்தில் உள்ள 53 ஐ.டி.ஐ.களில் மெக்கானிக் மோட்டாா் வாகனம் தொழிற்பிரிவு உள்ளது. அவற்றில் மின்சார வாகனங்களை இயக்கவும், பழுது நீக்கி பயிற்சி பெறவும் வசதியாக ரூ.5.98 கோடியில் மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம் என்ற இணையதளம் வழியாக தனியாா் துறை நிறுவனங்களின் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 238 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கும் அடையாளமாக 6 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.
இந்த நிகழ்வில் அமைச்சா்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, நிலோபா் கபில், தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job Portal" மூலம் தனியார் துறை நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக இணையம் வழியாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினேன். pic.twitter.com/GZj2EaqM1F
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 16, 2020