சென்னை:
மோடி அறிவுறுத்தியதால்தான், அதிமுக., இணைப்புக்கும், தமிழக அமைச்சரவையில் பங்கெடுப்பதற்கும் ஒப்புக் கொண்டேன் என்று கூட்டத்தில் பேசியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பிரதமர் மோடி என்று இல்லை, வேறு யார் வேண்டுமானாலும் ஜெயலலிதா தலைமையில் இயங்கிய கட்சி உடைந்துள்ளதே என்ற ஆதங்கத்தில் அறிவுரை கூறினாலும் ஏற்கலாம். கூறும் கருத்துதான் முக்கியம்.
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், அது கொள்ளையடித்து ஊரை ஏய்த்த குடும்பம், கொள்ளையடித்து சொத்து சேர்த்த குடும்பம். எனவே அதன் தொடர்பை விட்டு விட்டு உண்மை தொண்டர்களுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யார் கருத்து கூறினாலும் அது ஏற்கத் தக்கதே. ஏன்.. பத்திரிகையாளர்களான நீங்கள் அப்படி கூறினாலும் அதை ஏற்கலாம். கூறும் கருத்துதான் முக்கியமே தவிர, யார் கூறினார்கள் என்பது முக்கியமில்லை.
தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் நல்ல உறவை வைத்துள்ளோம். அதேநேரம், அதிமுகவின் கொள்கைப்படி மாநில சுயாட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார் ஜெயக்குமார்.